பீகாரில் ஆட்டம் ஆரம்பம்-ஜெயித்த உடனேயே பாஜகவிடம் இருந்து எம்எல்ஏக்களை பாதுகாக்க காங். அதிரடி வியூகம்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்னதாகே ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களில் கட்சிகள் மும்முரமாக உள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. பீகார் சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் அதாவது எக்ஸிட் போல் முடிவுகளில் தொங்கு சட்டசபைதான் அமையும் என பெரும்பாலானவை தெரிவித்துள்ளன.
ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் மற்றும் ஜேடியூ-பாஜக அணிகள் ஆட்சி அமைக்க சொற்ப எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படலாம் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். ஆகையால் சிராக் பாஸ்வானின் எல்ஜேபி புதிய ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவும் எம்.எல்.ஏக்களும்
அதேநேரத்தில் ஒவ்வொரு மாநில தேர்தலிலும் கற்ற பாடங்களின் அடிப்படையில் உஷார் நடவடிக்கைகளில் இப்போதே கட்சிகள் இறங்கிவிட்டன. ஆட்சி அமைக்க தேவைப்படும் எம்.எல்.ஏக்களை வளைத்து போடுவதில் பாஜக படுதீவிரமாக இருக்கும் என்பதை பல மாநில தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

காங். அதிரடி வியூகம்
பாஜகவிடம் இருந்து எம்.எல்.ஏக்களை பாதுகாக்க மாநிலங்களை விட்டு மாநிலங்களுக்கு அனுப்பிய அனுபவமும் காங்கிரஸுக்கு உண்டு. இதே பார்முலாவை பீகாரில் பாஜக நாளை அரங்கேற்றலாம் என்பதால் ஜெயித்த உடனேயே எம்.எல்.ஏக்களை தாங்கள் ஆளும் பஞ்சாப் அல்லது ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டிருக்கிறதாம் காங்கிரஸ்.

பீகாரில் சீனியர்கள்
பல மாநிலங்களில் கோட்டைவிட்டது போல் இருக்கக் கூடாது என்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்களை இப்போதே பீகாருக்கு அனுப்பி வைத்திருக்கிறது காங்கிரஸ். அக்கட்சியின் மூத்த தலைவர்களான ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, அவினாஷ் பாண்டே ஆகியோர் தலைமையிலான டீம்தான் நாளைய அதிரடிகளுக்கு வியூகம் வகுத்திருக்கிறதாம். சுர்ஜிவாலா நேற்றே பாட்னா வந்துவிட்டாராம்.

காங்கிரஸ் உஷார்
தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை முதலில் பாதுகாப்பாக பாட்னாவுக்கு அழைத்து வருவதற்கான அத்தனை ஏற்பாடுகளும் இப்போதே செய்யப்பட்டிருக்கிறதாம். அதன்பின்னர் உரிய அறிவுறுத்தல்களுடன் பிற மாநிலங்களுக்கு எம்.எல்.ஏக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்களாம். கோவா, மணிப்பூரில் பாஜகவின் தடாலடிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனதை பீகாரில் செய்துவிடக் கூடாது என்பதால் காங்கிரஸ் இப்போதே உஷாராகிவிட்டதாம்.












Click it and Unblock the Notifications