பீகார் முதல்வராக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் நிதிஷ்குமார்.. துணை முதல்வரானார் தேஜஸ்வி
பீகார் மாநிலத்தில் 8-வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்கிறார்
பாட்னா: ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகார் மாநிலத்தில் 8-வது முறையாக முதல்வர் பதவியை ஏற்றுள்ளார் நிதிஷ்குமார். பாட்னாவில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார்.
2020-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துகொண்டது.
Recommended Video
அந்த தேர்தலில் பாஜக 77; ஜேடியூ 45 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன என்றாலும், தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார்...
அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிச்சிட்டோம்.. 'துரோகி, எதிரி’ - 2 பேரை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
நிதிஷ்குமார்
இதையடுத்து, நிதிஷ்குமார் அமைச்சரவையில் 16 பாஜக அமைச்சர்கள் இடம்பெற்றனர். ஆனால், ஆட்சி அமைத்ததில் இருந்தே, பாஜகவுடன் மனக்கசப்புடன் இருந்துவந்தவர் நிதிஷ்குமார்.. இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன... எந்நிலையிலும் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதற்கேற்றவாறு நேற்றைய தினம் ஜேடியு எம்எல்ஏக்கள், எம்பிக்களின் அவசர கூட்டத்தையும் கூட்டியிருந்ததால், கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது..
ராஜினாமா
அந்த கூட்டத்தில் முதல்வர் நிதிஷ்குமார், "பாஜக நமது கட்சியை அவமதித்துவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சி செய்தது. அதனால், பாஜக உடனான கூட்டணியை முறிக்கிறோம்... முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று அறிவித்தார். இதையடுத்து, நேற்றைய தினம் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி முறிந்தது... நிதிஷ்குமார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ஆட்சியும் கவிழ்ந்தது.
மெகா கூட்டணி
பிறகு ஆளுநர் மாளிகைக்கு சென்ற நிதிஷ் குமார், ஆளுநர் பாகு சவுகானிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.. அதன்பிறகு, அங்கிருந்து நேரடியாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் வீட்டுக்கு நிதிஷ் சென்றார்... அங்கு தேஜஸ்வி யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்... அப்போது ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி உறுதி செய்யப்பட்டது... பிறகு, ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் அனைவரும் நிதிஷ் குமார் வீட்டுக்கு சென்றனர். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் மெகா கூட்டணியின் தலைவராக நிதிஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உரிமை கோரினார்
இதைத்தொடர்ந்து நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினர்... தங்களது ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்தபோது, அதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், 2020 தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களை கைப்பற்றிய நிலையிலும் நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்ததாகவும், ஆனால், பீகார் மக்களையும், பாஜகவையும் நிதிஷ்குமார் ஏமாற்றிவிட்டதாக அவர் தெரிவித்தார்...
ட்விஸ்ட்கள்
ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பீகாரின் முதல்வராக 8வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார். ஆளுநர் பாகு சவுகான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பீகாரில் அதிக எம்எல்ஏக்களை வைத்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் முதல்வர் பதவியை நிதிஷ்குமாருக்கு விட்டுக்கொடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் மகாகத்பந்தன் கூட்டணியின் முக்கிய தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்...
சாதனை
பதவியேற்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பாஜக கூட்டணியிலிருந்து விலகியது முற்றிலும் கட்சி எடுத்த முடிவு என்றார்.. பீகாரின் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்றுள்ள ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 24ந்தேதி முதல்முறையாக பீகாரின் முதல்வராக பதவியேற்றார்.. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார். அந்த வகையில், பீகார் மாநிலத்தின் நீண்டகாலம் முதல்வராக பதவி வகித்தவர் என்ற பெருமையை நிதிஷ்குமார் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.