இத்தனை பேரா? அட போங்கய்யா.. பீகாரில் புதிய பிரச்சனையில் காங்கிரஸ்.. ராகுல் குழப்பம்!
பீகாரில் நிறைய முக்கிய தலைவர்கள் கூட்டணியில் இருப்பதால் யாருக்கு எந்த இடத்தை லோக்சபா தேர்தலின் போது தருவது என்று தெரியாமல் காங்கிரஸ் கட்சி குழம்பிப் போய் இருக்கிறது.
பாட்னா: பீகாரில் நிறைய முக்கிய தலைவர்கள் கூட்டணியில் இருப்பதால் யாருக்கு எந்த இடத்தை லோக்சபா தேர்தலின் போது தருவது என்று தெரியாமல் காங்கிரஸ் கட்சி குழம்பிப் போய் இருக்கிறது.
பீகாரில் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தது. இப்போது கதை மொத்தமாக மாறியுள்ளது. காங்கிரசை நோக்கி தலைவர்கள் பலர் குவிந்து இருக்கிறார்கள்.
ஆனால் அதுவே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு விதத்தில் பிரச்சனையாக மாறி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
காங்கிரசின் கூட்டணி
காங்கிரஸ் மூலம் பீகாரில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் பெரிய மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் முதல்முறை கூட்டணி உருவாக்கி இருக்கிறது. இதில் ஆர்எல்எஸ்பி (ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி), ராஷ்டிரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ளது. இதில் ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி சில நாட்களுக்கு முன்புதான் பாஜகவில் இருந்து பிரிந்து காங்கிரசுடன் இணைந்தது. இன்னும் சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்ளது.
பெரிய பேரணி
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் கடந்த வாரம் பேரணி நடத்தப்பட்டது. 1990களின் தொடக்கத்தில் கடைசியாக காங்கிரஸ் அங்கு பேரணி, கூட்டங்களை நடத்தியது. அதன்பின் 30 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் காங்கிரஸ் மீண்டும் அங்கு பேரணி நடத்தி உள்ளது. இது வெற்றியில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
யார் எல்லாம்
இந்த நிலையில், பீகாரில் பாஜகவில் இருந்த கீர்த்தி ஆசாத், சந்துருகன் சின்ஹா, உதய சிங், சுயேச்சை எம்எல்ஏஆனந்த் சிங், ஜேஏபியின் பப்பு யாதவ், ஜேடியுவின் ரிஷி மிஸ்ரா, முன்னாள் எம்.பி லவ்லி ஆனந்த், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் ஆகியோர் அவர்கள் இருந்த கட்சியை விட்டுவிட்டு காங்கிரசில் சேர்ந்து இருக்கிறார்கள். இதனால் பீகாரில் காங்கிரஸ் பெரிய பலம் பெற்றுள்ளது.
ஒரே சாதி
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் 90 சதவிகிதம் பேர் மேல் சாதியினர். பிராமணர்கள், ராஜ்பூட்ஸ் உள்ளிட்ட மேல் சாதியை சேர்ந்தவர்கள்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியே இந்த திடீர் மாற்றத்தை பார்த்து திகைத்தபடி இருக்கிறது. முக்கியமாக பாஜகவை சேர்ந்த பலர்தான் காங்கிரசில் சேர்கிறார்கள்.
தலித் குழப்பம்
இதில் காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நம்பி இருக்கும் தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ஜேடி கட்சியும் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறது.
சீட் குழப்பம்
இது பீகாரில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் ஒதுக்குவதில் குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது. பாஜகவில் இருந்து வந்த அனைவருக்கும் சீட் கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறார் ராகுல். அதே சமயம் அவர்கள் கேட்கும் அதே இடத்தை ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சியில் இருக்கும் முக்கிய உறுப்பினர்களும் கேட்கிறார்கள். இதனால் சில முக்கிய இடங்களை யாருக்கு அளிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் ராகுல் கஷ்டப்பட்டு வருகிறார்.
என்ன பிரச்சனை
இன்னும் முழுதாக சீட் ஒதுக்கீடு நடந்து முடியாத காரணத்தால் இந்த கூட்டணியில் இன்னும் பல பிரச்சனைகள் வரலாம் என்கிறார்கள். ராகுல் இதை எப்படி கையாள்வார் என்பதை பொறுத்தே அவரின் அரசியல் தந்திரம் தெரிய வரும்.