2 முறை தப்பு செய்துட்டேன்.. இனி பாஜக கூட்டணியை விட்டு போகமாட்டேன்! அமித்ஷாவிடம் கூறிய நிதிஷ் குமார்
பாட்னா: 2 முறை தப்பு செய்துவிட்டேன். இனி ஒருபோதும் பாஜக கூட்டணியை விட்டு விலகமாட்டேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் உறுதியாக கூறினார். பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் இந்த உறுதியை அளித்தார்.
பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியூ) கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

பீகாரை பொறுத்தவரை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், பாஜக, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைவராக உள்ள ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகள் தான் பலமாக உள்ளன. இதுதவிர ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் (எஸ்), இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இதில் தற்போது பாஜக, ஐக்கிய ஜனதாதளம், எச்ஏஎம் (எஸ்) கட்சிகள் ஆளும் கூட்டணியாக உள்ளன. ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கட்சியாக உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் அதே கூட்டணி அமைய உள்ளது. பாஜக, ஐக்கிய ஜனதாதளம், எச்ஏஎம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்க தயாராகி வருகின்றன. இருப்பினும் நிதிஷ் குமார் அடிக்கடி கூட்டணி மாறும் பழக்கத்தை கொண்டவர். இதனால் அவர் மீது பாஜகவுக்கு சந்தேகம் என்பது இருந்து வருகிறது.
இப்படியான சூழலில் தான் பாஜக கூட்டணியை விட்டு ஒருபோதும் செல்லமாட்டேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நிதிஷ் குமார் உறுதியளித்துள்ளார்.
அதாவது பீகார் பாபு ஆடிட்டோரியத்தில் இன்று மத்திய கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த விழாவில் நிதிஷ் குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‛‛நான் 2 முறை தவறு செய்துவிட்டேன். இனி அதுபோன்ற தவறை செய்யமாட்டேன். பாஜகவின் கூட்டணியில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டேன். பீகார் மாநில மக்கள் தற்போது மத்திய அரசால் பெரிதும் பலன் பெற்று வருகின்றனர் . மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்கள் பீகார் மக்களுக்கு கிடைக்கிறது.
குறிப்பாக அமித்ஷாவின் துறையான கூட்டுறவுத்துறை மூலம் மக்களுக்கு பீகார் மட்டுமின்றி நாடு முழுவதும் பலன் கிடைக்கிறது. பீகார் என்பது பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் உள்ளது. சுயஉதவி குழுக்கள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் பல கோடி மதிப்பிலான திட்டங்களை அந்த மாநிலத்துக்காக தொடங்கி வைத்தார். அப்போது அவர், ‛‛பீகார் சட்டசபை தேர்தலை பாஜக கூட்டணி முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் சந்திக்க உள்ளது. அந்த தேர்தலில் பாஜக நிச்சயம் வெல்லும். பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம். மாநிலத்தில் நிலையான ஆட்சியை பாஜக கூட்டணி வழங்கும்'' என்று பேசியிருந்தார்.
முன்னதாக பீகாரில் கடந்த 2020ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியூ), பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. நிதிஷ் குமார் முதல்வரானார். 2 ஆண்டு ஆட்சிக்கு பிறகு அவர் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினார். இதையடுத்து நிதிஷ் குமார் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். இந்நிலையில் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மீண்டும் அந்த கூட்டணியை விட்டு வெளியேறிய நிதிஷ் குமார் பாஜகவுடன் கைகோர்த்து முதல்வரானார்.
அதற்கு முன்பாக பாஜக கூட்டணியை ஒருமுறை அவர் பாதியில் விட்டு வெளியேறினார். நிதிஷ் குமாரை பொறுத்தவரை முதல்வர் பதவியை காப்பாற்றி கொள்ள அடிக்கடி கூட்டணி மாற்றி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படியான சூழலில் தான் இனி பாஜக கூட்டணியை விட்டு விலகமாட்டேன் என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications