பீகார் தேர்தல்...கூட்டணி அமைத்து முதல்வரையும் அறிவித்தார் மாயாவதி...தலித்களுக்கு ஆதரவாக முழக்கம்!!
பாட்னா: பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் ராஷ்டிரிய லோக் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாகவும், அந்தக் கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவை முதல்வர் வேட்பாளராக முன்மொழிவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி முடிவாகி இருந்தாலும், இன்னும் பெரிய கூட்டணி கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தாளம் ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவை எட்டவில்லை.
இன்று ஹத்ராஸ் செல்லும் ராகுல், பிரியங்கா.. 144 தடையுத்தரவு, மாவட்ட எல்லை சீல்.. உ.பி.யில் பதற்றம்
முதல்வர்
இந்த நிலையில் ராஷ்டிரிய லோக் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட இருப்பதாக மாயாவதி தெரிவித்துள்ளார். இந்தக் கட்சியின் தலைவராக இருக்கும் உபேந்திர குஷ்வாஹாவை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சமத்துவம்
இதுகுறித்து மாயாவதி கூறுகையில், ''அரசியல், சமூகம், வேலை வாய்ப்பு என்று அனைத்து இடங்களிலும் தலித்கள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர், உயர் ஜாதியினர் என அனைவருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. எங்களது கூட்டணி சார்பில் முதல்வராக உபேந்திர குஷ்வாஹாவை முன்மொழிகிறேன்.
நோக்கம்
பீகாரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். ஆனால், இதுவரை எந்தக் கட்சியும் ஏழைகள், தலித்களுக்கு என்று எதுவும் செய்தது இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக உறங்கிக் கொண்டு இருந்த மத்திய, மாநில அரசுகள் தற்போது திடீரென அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இவர்களது நோக்கம் என்ன என்பதும், எதற்காக இந்த அறிவிப்புகள் என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த முறை அவர்களிடம் யாரும் தங்களது செல்வாக்கை திணிக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
முடிவுகள்
பீகார் மாநிலம் ஒவ்வொருவருக்கும் பொதுவானதாக, நல்லது செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். பீகாரில் அக்டோபர் 28ஆம் தேதி துவங்கும் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும். நவம்பர் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.