பீகாரின் அடுத்த முதல்வர் வரும் ஞாயிறு பிற்பகல் 12.30க்கு தேர்வு.. நிதீஷ்குமார் அறிவிப்பு
பாட்னா: பீகாரின் அடுத்த முதல்வர் வரும் ஞாயிறு அன்று தேர்வு செய்யப்படுவார் என அம்மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், விஐபி ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் மகாபந்தன் கூட்டணி 110 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி செய்யும் வாய்ப்பை பறிகொடுத்தது.

பாஜக அதிக இடம்
வழக்கமாக நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிதான்அதிக இடங்களில் வெற்றி பெறும், பாஜக இரண்டாவது இடத்தை பெறும் முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக சுஷில் குமார் மோடியும் பொறுப்பு வகிப்பார்கள். ஆனால் இந்த முறை நிதீஷ் குமாரின் கட்சி வெறும் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் பாஜக கட்சி 74 இடங்களில் வென்றுள்ளது. இதனால் முதல்வர் பதவிக்கு நிதீஷ் குமாருக்கு பாஜக தருமா என்ற கேள்வி எழுந்தது.

மோடி அளித்த ஒப்புதல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜே.டி.யுவை விட 31 இடங்கள் அதிகம் வென்று 74 இடங்களுடன் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக உயர்மட்டக்குழு நிதீஷ்குமாரை அடுத்த முதல்வராக்க ஒப்புக் கொண்டு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர்
இந்நிலையில் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜே.டி (யு), பாஜக, எச்ஏஎம் மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் முதல்வர் நிதீஷ்குமாரின் இல்லத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பீகாரின் முதல்வர் வேட்பாளரை வரும் நவம்பர் 15ம் தேதி தேர்வு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

பதவி ஏற்பு விழா
இது தொடர்பாக முதல்வர் நிதீஷ்குமார் கூறுகையில். தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் யார் என்பதை வரும் நவ.15 மதியம் 12.30மணிக்கு முடிவு செய்ய உள்ளோம். அத்துடன் பதவி ஏற்பு விழா எப்போது என்பதையும் முடிவு செய்ய உள்ளோம் என்றார்.

நிதீஷ் முதல்வரா?
தேர்தல் செயல்முறை தொடங்குவதற்கு முன்பே அவர் ஆளும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அனைத்து கட்சிகளும் இப்போது அடுத்த அரசை அமைப்பதில் கவனம் செலுத்துகின்றன, தீபாவளி பண்டிகைகள் இந்த வார இறுதியில் முடிந்தவுடன் விரைவில் பதவியேற்பு நடைபெற உள்ளது. ஜே.டி.யூ தலைவர் நிதீஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ட்விஸ்ட் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.

அதிக காலம் முதல்வர்
வரும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவி வகித்தால், பீகாரின் நீண்ட முதல்வர் என்று பெருமையை நிதீஷ்குமார் பெறுவார். தற்போதைய நிலையில் 17 ஆண்டுகள் 52 நாட்கள் பதவியில் இருந்த மாநிலத்தின் முதல் முதல்வர் ஸ்ரீகிருஷ்ணா சின்ஹா இந்த சாதனையை வைத்திருக்கிறார். நிதீஷ்குமார் இதுவரை . 14 ஆண்டுகள் 82 நாட்கள் பீகார் மாநிலத்தில் முதல்வராக இருந்துள்ளார்












Click it and Unblock the Notifications