சரித்திரம்...பீகார் மாநிலத்தின் முதல்வராக 8-வது முறையாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்குமார்!
பாட்னா: பீகார் மாநிலத்தின் முதல்வராக 8-வது முறையாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) தலைவர் நிதிஷ்குமார் நாளை பாட்னாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளார்.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணிக்கு நிதிஷ்குமார் குட்பை சொல்லிவிட்டதால் அம்மாநில ஆட்சி கவிழ்ந்தது. பீகாரில் 2020 சட்டசபை தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. அத்தேர்தலில் பாஜக 77; ஜேடியூ 45 இடங்களில் வென்றன. ஆனாலும் தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவியேற்றார். நிதிஷ்குமார் அமைச்சரவையில் 16 பாஜக அமைச்சர்கள் இடம்பெற்றனர்.
பாஜகவுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் இன்று அறிவித்தார். அதன்பின்னர் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதம் கொடுத்தார்.

பாஜகவை விட்டு விலகி வந்த ஜேடியூவுக்கு ஆர்ஜேடி,காங்கிரஸ்,இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது. பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல்வராகவும் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர் மீண்டும் ஆளுநரை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் சந்தித்த நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் தமது கூட்டணியின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார் நிதிஷ்குமார். இதனிடையே பாட்னாவில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதல்வராக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார்.
பீகார் முதல்வராக முதல் முறையாக 2000-ம் ஆண்டு மார்ச் 3-ந் தேதி முதல் மார்ச் 10-ந் தேதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்தார் நிதிஷ்குமார். அதன் பின்னர் 2005-2010; 2010-2014 என தொடர்ச்சியாக 8 ஆண்டுகளும் 2015-2022 என 7 ஆண்டுகளும் முதல்வராக பதவி வகித்தார் நிதிஷ்குமார். பீகார் முதல்வராக சுமார் 15 ஆண்டுகள் பதவி வகித்தவர் நிதிஷ்குமார். அம்மாநில அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் முதல்வராக இருந்தவரும் நிதிஷ்குமார்தான். நிதிஷ்குமார் இதுவரை அதாவது 7 முறை முதல்வராக பதவியேற்ற விவரம்: மார்ச், 2000; நவம்பர்,2005; நவம்பர், 2010; பிப்ரவரி, 2015; நவம்பர், 2015; ஜூலை 2017, நவம்பர் 2020.
நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் ஆர்ஜேடி, ஜேடியூ கட்சிகளுக்கு தலா 14 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன; காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சரவை இடம் வழங்கப்படுகிறது. ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராகிறார். காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications