Pakistani Woman on Bihar Voter List: பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தான் பெண்ணின் பெயர்! விசாரணைக்கு உத்தரவு
பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியாகியிருந்தது. இதில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானை சேர்ந்த பெண் இந்தியா வந்ததாகவும், அவர் பீகாரிலேயே தங்கிவிட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ விசாரணைக்கும், வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசா காலாவதியான பிறகும், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களை அடையாளம் காண மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கிய சரிபார்ப்பு நடவடிக்கையின்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மாநில வாக்காளர் பட்டியலில் அப்பெண்ணின் பெயர் இருப்பதோடு, சிறப்பு தீவிர திருத்தச் செயல்பாட்டின்போதும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணின் பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்கள் அடங்கிய கடிதம் தேர்தல் ஆணையத்திடமிருந்து பூத் லெவல் அதிகாரிக்கு கிடைத்திருக்கிறது. இது அவரது பாகிஸ்தான் குடியுரிமையை உறுதிப்படுத்தியது. அவரது பாஸ்போர்ட் 1956 இல் ரங்க்பூரில் வழங்கப்பட்டது, மேலும் அவரது விசா 1958 ஆம் ஆண்டை சேர்ந்தது என அதிகாரி கூறியிருக்கிறார். தற்போது இந்த பெண்மணி மிகவும் வயதானவராகவும், கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டவராகவும் இருக்கிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எதிர்க்கட்சிகளிடையே கடும் எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில், இந்த திருத்தம் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் கண்டறியப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications