கோ பேக் நட்டா.. பாஜக தலைவருக்கு எதிராக பீகாரில் ஒலித்த முழக்கம் - அணிதிரண்ட மாணவர்கள் - ஏன்ன காரணம்?
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு இடதுசாரி மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் நட்டாவின் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது என்று பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள 'பாட்னா பல்கலைக்கழகத்தில்' விழா ஒன்றில் சிறப்புரை ஆற்ற ஜே.பி.நட்டா வந்திருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நட்டா இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவராவார். இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை 2020ஐ திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் நட்டாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை திரும்ப போக சொல்லி முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

பாட்னா பல்கலைக்கழகம்
பாட்னா பல்கலைக்கழகம் சுமார் 160 ஆண்டுக்கால வரலாற்றை கொண்டதாகும். இதில் நட்டாவின் தந்தை பணியாற்றியுள்ளார். நட்டா இங்கிருந்துதான் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். இச்சூழலில் அவர் பலகலைக்கழக விழா ஒன்றில் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். விழாவுக்கு வந்த அவருக்கு இடதுசாரி மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை (AISA) சார்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே செல்லுமாறும் அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியின் தேசிய தலைவர் ஒருவரை மாணவர்கள் முழக்கமிட்டு எதிர்த்த சம்பவம் அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தரம் உயர்த்த கோரிக்கை
160 ஆண்டுகால வரலாறு கொண்ட இந்த பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால் இந்த கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது மாணவர்கள் மட்டுமன்றி அம்மாநிலத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் கோரிக்கையும் இதுதான். கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார், கடந்த காலத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்த கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்திருக்கிறது.

இடதுசாரி மாணவர்கள்
இப்படியான சூழலில் இடதுசாரி மாணவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நட்டா வருகையை எதிர்த்தது, நட்டாவின் பாதுகாப்பு மீறி நடந்துள்ளது என்று பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அதாவது ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரின் அனுமதியுடன் இந்த பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது என்று பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது இருகட்சிகளின் உறவுகளுக்கு இடையே சிக்கலையும் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய கல்விக்கொள்கை
மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் நிலைகுலைந்த நட்டாவின் பாதுகாவலர்கள் அவரை போராட்டக்காரர்களிடமிருந்து காப்பாற்ற சற்று சிரமப்பட வேண்டியிருந்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த AISA அமைப்பின் மாநில இணைச் செயலாளர் குமார் திவ்யம், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை 2020ஐ திருமப்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். இந்த கல்விக்கொள்கை சமூக நீதிக்கு எதிரானது என்பதால் தாங்கள் அதை எதிர்க்கின்றோம் எனவும், எனவே மத்திய அரசு இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அதேபோல பாட்னா பல்கலைக்கழகத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள கட்சியின் தேசிய தலைவரின் வருகையை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்தது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications