என்னா அடி.. 14 வயதிலேயே இப்படியா? வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி!
பாட்னா: ஐபிஎல் கிரிக்கெட்டில் 14 வயது வீரராக உள்ள வைபவ் சூர்யவன்ஷி குஜராத் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி சதமடித்ததை பிரதமர் மோடி புகழ்ந்து பேசி உள்ளார்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பீகாரில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டிகள் தொடங்கி உள்ளது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியை, பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.
இதுதொடர்பாக பிரமதர் மோடி பேசும்போது, ‛‛நான் ஐபிஎல்லில் பார்த்தேன். பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார். இந்த இளம் வயதில் அவர் பெரிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையின் பின்னணியில் அவரது கடின உழைப்பு உள்ளது.
அவர் தனது திறமையை வெளிக்கொண்டு வர பல போட்டிகளில் விளையாடியுள்ளார். நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பிரகாசிப்பீர்கள். முடிந்தவரை விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எப்போதும் விளையாட்டு துறைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
புதிய கல்வி கொள்கையான தேசிய கல்வி கொள்கையில் விளையாட்டை பிரதான கல்வியின் ஒரு பகுதியாக நாங்கள் மாற்றி உள்ளோம். நாட்டில் நல்ல வீரர்களுடன் சிறந்த விளையாட்டு நிபுணர்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். விளையாட்டில் நாம் டீமாக சேர்ந்து வெல்வதை கற்றுக்கொள்கிறோம். அதோடு ஒன்றாக சேர்ந்து முன்னேறுவதை அறிந்து கொள்கிறோம்'' என்று கூறினார்.
வைபவ் சூர்யவன்ஷி தற்போது ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பீகாரில் உள்ள சமஸ்திபூர் பகுதியை சேர்ந்தவர். தற்போது பீகாரில் கோலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடங்கி உள்ளதால் பிரதமர் மோடி வைபவ் சூர்யவன்ஷியை குறிப்பிட்டு பாராட்டி பேசினார். மேலும் ஐபிஎல்லில் விளையாடும் மிக இளம்வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். கடந்த மாதம் 25ம் தேதி நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 50 பந்துகளில் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜோஸ் பட்லர் 26 பந்துகளில் 50 ரன்களும், சாய் சுதர்சன் 30 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து இருந்தனர். அதன்பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. 120 பந்துகளில் 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட அதிரடியாக ஆடினர்.
இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் 11 சிக்ஸ், 7 பவுண்டரி உடன் சதமடித்தார். இறுதியில் 37 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். இதன்மூலம் ஐபிஎல்லில் மிக இளம்வயதில் சதமடித்தது, ஐபிஎல்லில் குறைந்த இன்னிங்ஸில் சதமடித்தது என்று மொத்தம் 9 சாதனைகளை படைத்து அசத்தினார். இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications