அரசியல் என்ட்ரி தந்த பிரசாந்த் கிஷோர்.. பீகாரில் புதிய கட்சியை தொடங்கினார்.. பெயர் என்ன தெரியுமா?
பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ‛ஜன் சுராஜ்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். பீகாரில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார்.
பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். பாஜக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளுக்கு அவர் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார்.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தான் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். இப்படியாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய அவர் உதவி செய்தார்.
அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளர் பணியை கைவிட்டார். அரசியலில் என்ட்ரி கொடுப்பதாக அறிவித்தார். மேலும் பீகாரை மையப்படுத்தி அரசியல் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ‛ஜன் சுராஜ்' எனும் இயக்கத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் பிரசாந்த் கிஷோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.
இந்நிலையில் தான் காந்தி ஜெயந்தி தினமான இன்று பிரசாந்த் கிஷோர் தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். அதன்படி ‛ஜன் சுராஜ்' என்ற அரசியல் கட்சியை அவர் தொடங்கி உள்ளார். இந்த வேளையில் பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதற்காக கட்சியை தொடங்கி உள்ளதாக கூறினார். இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:
‛‛பீகாரில் கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனர். வேறு கட்சி இல்லாததால் மக்கள் அந்த நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர். மக்கள் மாற்று கட்சியை விரும்பினாலும் கூட அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மாற்றத்துக்காக கட்சியை தொடங்கி உள்ளேன். கட்சியின் தலைவர் யார் என்பது? கடந்த 2 ஆண்டுகளாக என்னுடன் பயணித்தவர்கள் முடிவு செய்வார்கள்'' என்றார்.
பீகாரில் தற்போது பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அதேபோல் பிரதான எதிர்க்கட்சியாக நிதிஷ் குமாரின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோர் ‛ஜன் சுராஜ்' என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார்.
பீகாரில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. இந்த தேர்தலில் பீகாரில் உள்ள அனைத்து இடங்களிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரசாந்த் கிஷோர் இதற்கு முன்பு தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் அவர் அந்த கட்சியை விட்டு வெளியேறி தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்தார். தற்போது அரசியல் கட்சி தொடங்கி அவர் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications