அரசியல் கட்சிக்கான வெள்ளோட்டம்- 3,500 கி.மீ. பாதயாத்திரையை பீகாரில் இன்று தொடங்கும் பிரசாந்த் கிஷோர்!
பாட்னா: தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் இன்று பீகார் மாநிலத்தில் 3,500 கி.மீ பாதயாத்திரையை தொடங்க உள்ளார்.
இந்திய தேர்தல் களத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் வியூகம் என்பதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் காலங்களில் பயன்படுத்தி வெற்றி பெறுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வியூகம் வகுத்து வந்ததவரும் பிரசாந்த் கிஷோர்தான். 2021 சட்டசபை தேர்தல்களில் தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெல்வதற்கும் பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோரின் வியூகம் முக்கிய காரணம்.

பிகே எனும் பிரசாந்த் கிஷோர்
அரசியல் கட்சிகளின் வெற்றிக்குப் பின்னணியில் இருந்த பிரசாந்த் கிஷோர், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து செயல்பட்டார். அக்கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்தார். ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் பீகார் மாநிலத்தை மையமாக வைத்து அரசியல் கட்சி தொடங்கும் முடிவுக்கும் வந்தார் பிகே என்கிற பிரசாந்த் கிஷோர்.

பீகார் பாதயாத்திரை
இதனால் தேர்தல் வியூக வகுப்பு பணிகளுக்கு குட்பை சொல்லி இருந்தார். இந்த நிலையில் பீகார் மாநிலலத்தில் இன்று முதல் 3,500 கி.மீ பாதயாத்திரையை பிரசாந்த் கிஷோர் தொடங்க உள்ளார். மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான இன்று பீகார் மாநிலத்தின் மேற்கு சம்ரான் மாவட்டத்தில் தமது பாதயாத்திரையை பிரசாந்த் கிஷோர் தொடங்க உள்ளார். ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக இதே சம்ரான் மாவட்டத்தில்தான் 1917-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார் என்பது வரலாறு.

இன்று முதல் பாதயாத்திரை
பிரசாந்த் கிஷோரின் இந்த பாதயாத்திரை மொத்தம் 3,500 கி.மீ.க்கு திட்டமிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மக்களையும் சந்தித்து கலந்துரையாடும் வகையில் இந்த பாதயாத்திரை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜன் ஸ்வராஜ் என்ற பெயரிலான இந்த பாதயாத்திரை பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிரான பிரசாரமாகவும் அமைய உள்ளது. மொத்தம் 12 முதல் 18 மாதங்களுக்கு இந்த தொடர் பாதயாத்திரை நடைபெற உள்ளது.

பிகே அரசியல் கட்சி
இப்பாதயாத்திரையில் பங்கேற்பவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் தமது புதிய அரசியல் கட்சி தொடங்கும் முடிவு அறிவிக்கப்படும் என ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இதனால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்கான முன்னோட்டமாகவே பிரசாந்த் கிஷோரின் இந்த பாதயாத்திரை அமைய உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டு வரும் நிலையில் பிரசாந்த் கிஷோரின் பாதயாத்திரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications