ஹாஜிப்பூரின் "ராஜா".. மொத்தம் 7 முறை.. "கிங்"காக வலம் வந்த ராம் விலாஸ் பாஸ்வான்
பாட்னா: ஹாஜிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் அசைக்க முடியாத ராஜாவாக வலம் வந்தவர் ராம் விலாஸ் பாஸ்வான். பீகார் தலைவராக மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும் மக்களின் அன்பைப் பெற்ற ஒரு நல்ல தலித் தலைவர் பாஸ்வான்.
நாட்டின் மாபெரும் தலைவர்களுடன் இணைந்து நடந்தவர். .அவர்களின் வழியில் சென்றவர்.. பல இளைஞர்களுக்கு பெரும் வழிகாட்டியாக திகழ்ந்தவர்.
74 வயதாகும் பாஸ்வான்.. சாதாரண ஏழை வீட்டில் பிறந்து உயர்ந்த இடத்தை அடைந்தவர். கடும் கொள்கைப் பற்றாளர், விடா முயற்சி கொண்டவர், தொட்டதில் வெற்றி பெறும் வரை விடாமல் போராடியவர்.

அம்பேத்கரின் தொண்டர்
அம்பேத்கரை மனதில் ஏந்தி நடந்த அவர் தலித் மக்களின் மிகப் பெரிய நம்பிக்கையாக வலம் வந்தவர். எத்தனையோ தலித் தலைவர்களை இந்த நாடு கண்டுள்ளது. அதில் பாஸ்வானுக்கு தனி இடம் உண்டு. பீகார் மாநிலத் தலித் சமுதாயத்தின் உயர்வுக்காகவும், உரிமைக்காகவும் போராடியவர் பாஸ்வான். மொத்தம் எட்டுமுறை எம்பியாக இருந்தவர் பாஸ்வான். அதில் ஒரு முறை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 7 முறை லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

6 பிரதமர்களின் கீழ்
விபி சிங், தேவே கெளடா, ஐகே குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் என இரு பெரும் பிரதமர்களின் தலைமையின் கீழ் முக்கிய இலாகாக்களைக் கொண்ட மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது நரேந்திர மோடியின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். மத்திய அரசியலில் மிக மிக முக்கிய பங்கு வகித்தவர்களில் பாஸ்வான் முக்கியமானவர்.

கூட்டணி அரசியல் குழப்பங்களின் சாட்சி
விபி சிங், தேவெ கெளடா, ஐகே குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் என இந்தியா அதுவரை கண்டிராத மிகப் பெரிய கூட்டணி அரசியலில் முக்கியப் பங்கு வகித்தவர் பாஸ்வான். ஆட்சிகளும் காட்சிகளும் மாறும்போதெல்லாம் அந்தந்த மாற்றத்துக்கேற்ப தானும் மாறிக் கொண்டவர் பாஸ்வான். ஆனால் தனது அடிப்படை குணத்தையும், கொள்கையையும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை.

ஹாஜிப்பூர் ராஜா
ஹாஜிப்பூர்தான் பாஸ்வான் தொடர்ந்து வென்ற தொகுதியாகும். 1977ம் ஆண்டு முதல் முறையாக அவர் ஹாஜிப்பூர் மூலமாக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஜனதா கட்சி சார்பில் எம்பியாக வெற்றி பெற்றார். பின்னர் தொடர்ந்து 1980, 1989, 1996,1998. 1999, 2004, 2014 ஆகிய ஆண்டுகளில் ஹாஜிப்பூர் எம்பியாக வெற்றி பெற்றார்.

சோசலித்தையும் விடவில்லை
இடையில் 2009ம் ஆண்டு அவர் ஹாஜிப்பூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின்னர் 2010ம் ஆண்டு அவர் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சம்யுக்த சோசலிச கட்சியில் ஆரம்பத்தில் செயல்பட்ட அவர் பீகார் சட்டசபைக்கும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வந்தவர் ஆவார். பின்னர் லோக்தளத்தில் இணைந்தார். அதன் பின்னர் ஜனதாக் கட்சியில் செயல்பட்டார். 2000ம் ஆண்டு லோக் ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வந்தார்.












Click it and Unblock the Notifications