சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் களம்.. ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்!
பாட்னா: லாலு பிரசாத்தின் குடும்ப தொகுதியாக கருதப்படும் ராகோபூர் தொகுதியில், போட்டியிட தேஜஸ்வி யாதவ் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த 1995ம் ஆண்டு முதல் லாலு பிரசாத்தின் குடும்பம்தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்று வந்திருக்கிறது. கடந்த 2 தேர்தல்களிலும் தேஜஸ்வி வெற்றி பெற்றிருக்கிறார். எனவே, இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிப்பார் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

- 1995 - லாலு பிரசாத்
- 2000 - லாலு பிரசாத்
- 2005 - ராப்ரி தேவி (லாலுவின் மனைவி) - 71,960(48.76%) வாக்குகளை பெற்றிருந்தார்
- 2010 - சதீஷ் குமார் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்) - 64,222 (48.06%) வாக்குகளை பெற்றிருந்தார்
- 2015 - தேஜஸ்வி யாதவ் (லாலுவின் மகன்) - 91,236(49.15%) வாக்குகளை பெற்றிருந்தார்
- 2020 - தேஜஸ்வி யாதவ் - 97,404(48.74%) வாக்குகளை பெற்றிருந்தார்
பீகாரில் தற்போது நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். இவருடைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. மறுபுறம் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் 'மகாபந்தன்' கூட்டணியை அமைத்திருக்கின்றன.
தேஜஸ்வியின் வேட்புமனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் திவாரி, "மகாகத்பந்தன் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லாமல், இந்தக் கூட்டணி ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. மக்களின் பேராதரவு மற்றும் ஆசீர்வாதத்துடன் பீகாரில் தேஜஸ்வி அரசு நிச்சயம் அமையும்.
இது பாஜக தலைமையினாலான என்டிஏ கூட்டணியின் விடைபெறும் காலம். உபேன் குஷ்வாஹா கூட சில பிரச்சனைகள் இருப்பதாகக் கூறியுள்ளார். ஜிதன் ராம் மாஞ்சி, நிதிஷ் குமார் என அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். என்டிஏ என்பதற்கு 'இந்த முறை படகு மூழ்கும்' என்பதே இப்போது அர்த்தம். பீகார் இப்போது தேஜஸ்வி அரசை விரும்புகிறது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடும் 57 வேட்பாளர்களை கொண்ட, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நிதிஷ்குமார் வெளியிட்டார். 243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications