"இதுதான் எனது கடைசி தேர்தல்.." பீகார் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்த நிதிஷ் குமார்
பாட்னா: இந்த பீகார் சட்டசபை தேர்தல்தான், தனது கடைசி தேர்தல் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீகாரில் தற்போது மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இரு கட்ட தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் மூன்றாவது கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது, இதையொட்டி இன்றுடன் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது.

புர்னியா என்ற பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார் நிதிஷ்குமார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: இந்த தேர்தல்தான் நான் போட்டியிட போகும் கடைசி தேர்தல். இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிகின்றன. நாளை மறுநாளுடன் பீகார் தேர்தல் முடிவடைகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டணிகள் தாவினாலும் கூட, 15 வருடங்களாக பீகார் மாநிலத்தில் முதல்வராக இருப்பவர் நிதிஷ்குமார். எனவே அவரது இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதேநேரம், நிதிஷ் குமாருக்கு எதிராக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி மற்றும் சமீபத்தில் நிதிஷ்குமார்-பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற சிராக் பாஸ்வான் ஆகியோர், நிதிஷ் குமாருக்கு எதிிராக, தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருவதால், அதிலிருந்து சமாளிப்பதற்காக மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கக்கூடும் என்றும் தெரிகிறது.
முன்னதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிஹார் மாநிலத்தில் பிரச்சாரம் செய்தபோது, சிஏஏ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து அவரை கடுமையாக விமர்சனம் செய்து நிதிஷ்குமார் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications