ரூ. 2 கோடி வருமான வரி கட்ட சொல்லி கூலி தொழிலாளிக்கு நோட்டீஸ்.. ஆனா பாவம் அவர் வருமானமே 10,000 தானாம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பாதிக்கும் ஒருவருக்கு சுமார் ரூ.2 கோடி வருமான வரி கட்ட சொல்லி ஐடி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை பார்த்தவுடன் அந்த நபர் கலங்கிப் போய்விட்டார். இந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு வாரமாக வருமான வரித்துறை ஆபீசுக்கு செல்வதாகவும் இருப்பினும் இதில் தீர்வு கிடைக்கவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் வருமான வரியைச் சரியாகக் கணக்கிட்டுக் கட்டுவது என்பதே பெரிய வேலை. பல நேரங்களில் தேர்ந்த கணக்காளர்கள் இல்லை என்றால் ஐடி ரிட்டனை தாக்கல் செய்வதே தலைவலியாக மாறிவிடும்.

முறையாக வருமான வரி தாக்கல் செய்யாதோருக்கு ஐடி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்குவது வழக்கம். சில நேரங்களில் மாதம் சில ஆயிரம் சம்பாதிப்போருக்குக் கூட தவறுதலாக நோட்டீஸ் போய்விடும். அப்படியொரு வினோத சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
வருமான வரித்துறை நோட்டீஸ்: பீகாரின் கயா மாவட்டத்தில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுவும் 2 கோடி ரூபாய் வருமான வரி தொடர்பாக ஐடி அதிகாரிகள் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளனர். இதில் விஷயம் என்னவென்றால் அந்த நபரின் மாத வருமான வெறும் 10,000 ரூபாய். அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய தொகைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வந்தது எப்படி என்பது புரியாமல் அந்த குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள்.
கயாவில் உள்ள கோட்வாலி என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜீவ் குமார் வர்மா.. இவருக்குத் தான் இப்போது 2 கோடி ரூபாய்க்கான வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனக்கு எப்படி இந்த நோட்டீஸ் வந்தது என்று புரியாமல் குழம்பிப் போய் இருக்கும் ராஜீவ் குமார், இது குறித்து விளக்கம் கேட்க வருமான வரித்துறை அலுவலகத்திற்கே நேரடியாகச் சென்றுள்ளார்.
புலம்பும் இளைஞர்: இருப்பினும், அங்கு அவருக்கு முறையான விளக்கம் தரப்படவில்லையாம். கடந்த 4 நாட்களாக இந்த நோட்டீஸை வைத்துக் கொண்டு அவர் வருமான வரித்துறை அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து வருகிறார். ஆனாலும், ஒரு தீர்வு கிடைத்த பாடு இல்லையாம்.
இது தொடர்பாக அந்த நபர் கூறுகையில், "நானே கூலி வேலை செய்து காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்.. நான் என் வாழ்நாள் முழுக்க வேலை செய்தாலும் இவ்வளவு பெரிய தொகையைச் சம்பாதிக்க முடியாது. நான் கடந்த 2015இல் கயாவில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் ரூ.2 லட்சத்தை நிரந்தர வைப்புத் தொகையாக டெபாசிட் செய்தேன். ஆனால், சில காரணங்களால் அந்த பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்பே 2016இல் எடுத்துவிட்டேன். நான் செய்த ஒரே பெரிய பரிவர்த்தனை இது மட்டுமே.
மேல்முறையீடு செய்யணுமாம்: இந்த 2 கோடி ரூபாய் நோட்டீஸ் குறித்து நான் வருமான வரித்துறையை அதிகாரிகளிடம் கேட்டேன். அவர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மெசேஜ் வந்திருக்கலாம் என்றார்கள். இருப்பினும், அவர்கள் இந்த பிரச்சினைக்கான தீர்வை தரவில்லை. என்னை மேல்முறையீடு செய்ய மட்டுமே சொன்னார்கள். மேல்முறையீடு மட்டுமே இதைச் சரி செய்ய முடியும் என்கிறார்கள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
எனக்கு எல்லாம் வருமான வரி என்றாலே என்னவென்று தெரியாது. ஏதோ வருமான வரி ரிட்டன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியென்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. மாதம் ரூ. 10,000 மட்டுமே சம்பாதிக்கிறேன். நான் இந்த நோட்டீஸ் பெற்றதும் ரூ.67 லட்சத்தைச் செலுத்த வேண்டும் என்று அதில் இருக்கிறது. எனக்கு ஒன்னுமே புரியவில்லை" என்று புலம்பித் தள்ளுகிறார்.












Click it and Unblock the Notifications