கால் செய்த "அமித் ஷா".. போனை வெளியே வச்சுட்டு வாங்க.. உத்தரவிட்ட நிதிஷ் குமார்.. மாபெரும் மோதல்!
பாட்னா: பீகாரில் மிகப்பெரிய அரசியல் திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இத்தனை காலம் நீடித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி.. கூட்டணியை விட்டு மொத்தமாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் நிதிஷ் குமாருக்கும் - பாஜக தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக - நிதிஷ் குமார் இடையிலான மோதல் குறித்து கடந்த ஒன்றரை வருடமாகவே அரசல் புரசலாக பேச்சு அடிபட்டது. கடந்த லோக்சபா தேர்தலிலேயே இவர்கள் கூட்டணி உடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி திரௌபதி முர்முவிற்கு எதிராக வாக்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்போதெல்லாம் ஏற்படாத மோதல் இப்போது பூதாகரமாக ஏற்பட்டு இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆர்சிபி சிங்கிற்கு நிதிஷ் குமாரே எம்பி சீட் வழங்காத போதுதான் இந்த சர்ச்சை பெரிதானது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கமான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஆர்சிபி சிங் மத்திய அமைச்சரவையில் இரும்பு துறை அமைச்சர் பதவியில் இருந்தார். பாஜக அமைச்சரவையில் இருந்த ஒரே ஜேடியூ அமைச்சர் இவர்தான்.

நிதிஷ் குமார்
பாஜகவிடம் மிகவும் நெருக்கமாக இருந்ததால் ஆர்சிபி சிங் மீது நிதிஷ் குமார் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக பிரதமர் மோடியுடன் ஆர்சிபி சிங் மிகவும் நட்பாக இருந்திருக்கிறார். தான்தான் ஐக்கிய ஜனதா தளம் போன்ற பிம்பத்தை இவர் டெல்லியில் ஏற்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில்தான் ஆர்சிபி சிங் மீது நிதிஷ் குமார் கோபம் அடைந்துள்ளார். ஏற்கனவே பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபமாக இருந்த நிதிஷ் குமார் அவர்களின் அமைச்சரவையில் இருக்கும் ஆர்சிபி சிங் மீதும் கோபம் அடைந்துள்ளார். இதனால்தான் இந்த முறை அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவியையும் நிதிஷ் குமார் மறுத்துள்ளார்.

எம்பி பதவி போனது
மாறாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கிரோ மஹாட்டோவிற்கு ராஜ்ய சபா எம்பி தேர்தலில் போட்டியில் நிதிஷ் குமார் வாய்ப்பு வழங்கினார். இதனால் எம்பியாக இருக்கும் ஆர்சிபி சிங்,.. எம்பி பதவியையும், அமைச்சர் பதவியையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்பி சீட் கிடைக்காததால் அவர் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஆர்சிபி சிங் மீது நிதிஷ் குமார் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து விளக்கம் கேட்டார். இதனால் ஆர்சிபி சிங் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து வெளியேறினார். அதோடு ஐக்கிய ஜனதா தளம் கட்சி மூழ்க போகும் கப்பல் என்றும் விமர்சித்தார். இத்தனைக்கும் காரணமாக ஆர்சிபி சிங் - மோடி இடையிலான நெருக்கம்!

மோதல் காரணங்கள்
இப்பொது வெடித்துள்ள பாஜக - நிதிஷ் குமார் மோதலுக்கு இந்த ஆர்சிபி சிங் விவகாரமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது மகாராஷ்டிராவில் ஷிண்டேவை வைத்து உத்தவ் தாக்கரேவை வீழ்த்தியது போல ஐக்கிய ஜனதா தளத்தை ஆர்சிபி சிங்கை வைத்து பாஜக உடைக்க பார்ப்பதாக நிதிஷ் குமார் கோபம் கொண்டு உள்ளார். அதோடு ஆட்சியில் தனக்கான பவர் குறைந்து வருகிறது. சில அமைச்சர்கள் சொல்வதை கேட்பது இல்லை. இப்படியே போனால் அடுத்த முறை முதல்வராகவும் முடியாது என்று நிதிஷ் குமார் நினைத்து இருக்கிறார்.

3 கூட்டங்கள்
சிவசேனாவிற்கு நடந்ததும் தனக்கும் நடக்கும் என்று நிதிஷ் குமார் அஞ்சிய நிலையில்தான் பாஜகவுடன் உள்ள கூட்டணியை முறிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இன்று வீட்டில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என்று தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இதற்காக நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு நிர்வாகிகள் யாரும் போன் கொண்டு வர கூடாது. மின்னணு சாதனங்கள் எதையும் எடுத்து வர கூடாது என்று நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சி உடையும்
இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பற்றியும் நிதிஷ் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக பீகார் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க தனி கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ள இருக்கின்றன. நிதிஷுடன் கூட்டணி வைப்பது பற்றி இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
பீகாரில் பெரும்பான்மை பெற 127 இடங்கள் தேவை. இதில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45, ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 80, சிபிஐக்கு 12, சிபிஎம்க்கு 2, காங்கிரசுக்கு 19 இடங்கள் உள்ளன. இவர்கள் கூட்டணி வைத்தால் பீகாரில் எளிதாக ஆட்சி அமைக்க முடியும்.

போன் செய்தார்
இன்னொரு பக்கம் நிதிஷ் குமாரை சமாளிப்பது பற்றி பாஜக தனியாக மீட்டிங் நடத்த உள்ளது. இப்படி 3 மீட்டிங் இன்று ஒரே நாளில் நடக்க உள்ளன. இன்னொரு பக்கம் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு போன் செய்து நிதிஷ் குமார் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று அமித் ஷாவும் நிதிஷ் குமாரிடம் போனில் பேசியதாகவும்.. அதற்கு நிதிஷ் குமார் பிடி கொடுக்காமல் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த போன் காலில் சமாதானம் ஏற்படவில்லை என்பதால் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி இன்று உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What is happening between Nitish Kumar's JDU and BJP in Bihar? பீகாரில் மிகப்பெரிய அரசியல் திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இத்தனை காலம் நீடித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications