‛எதுவுமே சரியில்லை’..பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? நிதிஷ் குமார் சொன்ன முக்கிய தகவல்
பாட்னா: பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரிடம் வழங்கினார். இதையடுத்து தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது பற்றி பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பரபரப்பான விளக்கமளித்துள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியூ), லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தனர். ஜேடியூ கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் தான் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் நிதிஷ் குமார் பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்தார். இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் முதல்வராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி இன்று நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரை சந்தித்த நிதிஷ் குமார் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த நிதிஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது பற்றி விளக்கினார்.
இதுபற்றி நிதிஷ் குமார் கூறுகையில், ‛‛இன்று நான் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளனே். மாநிலத்தில் ஆட்சியை கலைக்கும்படி ஆளுநரிடம் கூறியுள்ளேன். கூட்டணியில் அனைத்து விஷயங்களும் சரியாக இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒவ்வொருவரிடமும் கருத்துகள் கேட்ட பிறகு தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது'' எனக்கூறி சென்றார்.
இந்நிலையில் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ் குமார் மீண்டும் பாஜக உதவியுடன் இன்று மாலையில் பீகார் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதன்பிறகு நிதிஷ் குமாரின் ஜேடியூ மற்றும் பாஜக சார்பில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ளது. தற்போது நிதிஷ் குமார் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளின் கூட்டணியை முறித்து பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தும் அவர் வெளியேறி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications