கெஞ்சி கேட்டாலும் நோ சான்ஸ்! நான் அந்த கூட்டணிக்கு போக மாட்டேன்..பரபரப்பை கிளப்பிய நிதிஷும் பாஜகவும்
பாட்னா: இந்தியா கூட்டணி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப போவதாக வெளியான தகவலை நிதிஷ் மறுத்துள்ளார். அதேவேளையில், நிதிஷ்குமார் கெஞ்சி கேட்டாலும் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என பாஜக தெரிவித்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து பீகாரில் கூட்டணி ஆட்சியை நிதிஷ் குமார் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணியை அமைத்து ஆட்சி அமைத்துள்ளார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள "இந்தியா" கூட்டணியில் நிதிஷ் குமாரின் பங்கும் மிக முக்கியமானதாக இருந்தது.

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தையும் பாட்னாவில் நிதிஷ்குமார் நடத்தினார். பாஜகவை மீண்டும் ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணி தீவிரம் காட்டி வரும் நிலையில், திடீரென ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணிக்கு திரும்ப இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
பாரதிய ஜன சங்க தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளையொட்டி பாட்னாவில் பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பங்கேற்று, உபாத்யாயா சிலைக்கு மரியாதை செலுத்தினார். பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு நிதிஷ்குமாரிடம் , மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்ப உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், "இது அர்த்தமற்ற பேச்சு.. அப்படி எந்த திட்டமும் இல்லை" என்றார். மேலும், " இந்தியா" கூட்டணியில் பிரதமர் ஆவதற்கு நிதிஷ்குமார் தான் தகுதியான நபர் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மகேஸ்வர் ஹசாரி கூறியது குறித்து நிதிஷ்குமாரிடம் கேட்ட போது, இதுபோன்ற கருத்துகளை பேச வேண்டம் என அறிவுறுத்தியிருக்கிறேன். எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மட்டுமே எனது நோக்கம்" என்றார்.
இதற்கிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப மாட்டோம் என்று நிதிஷ்குமார் கூறியது பற்றி பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில் குமார் மோடியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சுஷில் குமார் மோடி, "எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்க வாய்ப்பில்லை. நிதிஷ் குமாரை ஏன் நாங்கள் மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும். அவருக்கான கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. நிதிஷ் குமார் கெஞ்சி கேட்டாலும் அவரை நாங்கள் (பாஜக)சேர்த்துக்கொள்ள மாட்டோம்" என்றார்.












Click it and Unblock the Notifications