இணக்கம்.. 110 வருட இந்து - முஸ்லிம் பிரச்சனை தீர்ந்தது.. சபாஷ் கலெக்டர்.. பெரம்பலூரில் சுவாரஸ்யம்
பெரம்பலூர் கலெக்டர் முயற்சியால் 110 வருட இந்து முஸ்லிம் பிரச்சனை தீர்க்கப்பட்டது
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் திருவிழாக்களில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இணைந்து நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் 110 ஆண்டுகள் கழித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முயற்சியின் பேரில் செல்லியம்மன் கோவில் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடை பெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது வி.களத்தூர் என்ற கிராமம்.. இங்கு 1912-ம் ஆண்டு முதல் செல்லியம்மன் கோவில் திருவிழாக்களில் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு மக்களிடையே தகராறு இருந்தது. இதன்காரணமாக, 110 வருடங்களாகவே கோயில் திருவிழாவும் நடக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இரு தரப்பினரிடம் உள்ள விரோதத்தையும் மனக்கசப்பையும் போக்கி, இணக்கத்தை ஏற்படுத்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முயற்சி எடுத்தார்..

திருவிழா
அதன்பேரில் மாவட்ட எஸ்பி, வருவாய் கோட்டாட்சியர், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் முன்பாக இரு தரப்பு மக்களையும் வரவழைத்து, அமைதி பேச்சு வார்த்தையை நடத்தினார்.. இந்த பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடத்தப்பட்டது.. இறுதியில், தங்கள் கிராமத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியான முறையில் திருவிழா நடத்திட இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்..

சந்தனக்கூடு
இதையடுத்து, கோவில் திருவிழாக்கான அழைப்பிதழை, இஸ்லாமிய பிரமுகர்களிடம் வழங்கி திருவிழாவினை முன்னின்று நடத்த அழைப்பு விடுத்தனர்... இறுதியில், 110 ஆண்டுகள் கழித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முயற்சியின் பேரில் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு மக்களிடையே ஒருமைப்பாடு ஏற்படுத்தும் வகையில் செல்லியம்மன் கோவில் திருவிழாவினை முன்னின்று நடத்தி வைத்தார். அதேபோல, வி.களத்தூர் ஜமாஅத் சார்பில் சந்தனக்கூடு திருவிழா கடந்த மே மாதம் 16ம் தேதி அன்று நடந்தது..

ஜமாத்தார்கள்
இந்த விழாவிற்கான அழைப்பிதழையும் முஸ்லிம் ஜமாத்தார்கள், இந்து சமய பிரமுகர்களிடம் வழங்கி அவர்களை திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்கள்... அதன்படியே இந்து பிரமுகர்களும் சந்தனக்கூடு விழாவில் கலந்து கொண்டனர்.. அவர்களுக்கான உரிய மரியாதை வழங்கியதுடன், எந்தவித அசம்பாவிதமும் இன்றி விழா சிறப்பாக சுமூகமாக இருதரப்பு சமுதாயத்தினரும் இணைந்து நடைபெற்று முடிந்தது.. இதில், முஸ்லிம் ஜமாத்தார் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

இணக்கம்
முன்னதாக, இரு சமுதாய முக்கிய பிரமுகர்களும் இணைந்து எவ்வித அசம்பாவிதமுமின்றி கோவில் விழா சுமூகமாக நடைபெற மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தனர்.. இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், வட்டாட்சியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது... மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, இணையத்திலும் பரவி நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications