அமைச்சர் சிவசங்கர் காரை மறித்த கிராம மக்கள்! நன்றி சொல்லப் போன இடத்தில் நடந்த நிகழ்வு!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் காரை மறித்து கிராமமக்கள் தங்கள் புகார்களை முறையிட்ட நிகழ்வால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்காக கிராமம் கிராமமாக பயணித்து வருகிறார் அமைச்சர் சிவசங்கர்.
இந்நிலையில் தெற்கு மாதவி என்ற கிராமத்திற்கு சென்ற போது அமைச்சரின் காரை மறித்த நிகழ்வு நடந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு! ஏராளமான பணிகள்! ரூ.56,000 முதல் ரூ.2 லட்சம் வரை ஊதியம்!
அமைச்சர் சிவசங்கர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் சிவசங்கர். சென்னையை தவிர்த்து ஊரில் இருக்கும் போது முடிந்தவரை தனது தொகுதிக்குள் உலா வருவதை அதிகம் விரும்பக் கூடியவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொகுதியின் பட்டிதொட்டியெங்கும் பயணித்து தனக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தி வருகிறார் சிவசங்கர்.
நன்றி சொல்ல
அந்த வகையில் ஆலத்தூர் வட்டாரத்தில் உள்ள வரகுபாடி, காரை, சிறுகன்பூர், தெற்கு மாதவி, சாத்தனூர் குடிகாடு, என பல கிராமங்களுக்கு பயணித்து நன்றி சொல்லச் சென்றார் அமைச்சர் சிவசங்கர். அதில் தெற்கு மாதவி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அமைச்சர் சிவசங்கர் காரை மறித்து மருதையாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதாகவும் இதனால் மழைக்காலங்களில் விளை நிலங்கள் பாழாவதாகவும் முறையிட்டனர்.
கிராமமக்கள்
மேலும், கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பற்றியும் அமைச்சர் சிவசங்கரிடம் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற உரிமையில் பெண்கள் முறையிட்டனர். இவை அனைத்தையும் பொறுமையாக கேட்ட அமைச்சர் சிவசங்கர், இதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததோடு அது குறித்து ஆன் தி ஸ்பாட்டிலேயே உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.
நன்றி சொல்ல
இதை படிப்பவர்கள் பலருக்கும் தேர்தல் முடிந்து ஒன்றே கால் வருடம் கழித்து வாக்காளர்களுக்கு நன்றிச் சொல்லச் சென்றாரா அமைச்சர் என நினைக்கத் தோன்றும். இவராவது இப்படி செல்கிறாரே என்று அவரை பாராட்ட வேண்டும். இன்னும் பலரோ துறை சார்ந்த பணிகள் காரணமாக தொகுதிக்கு கூட செல்ல முடியாமல் நிற்க நேரமின்றி ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.