கவரிங் நகை வியாபாரி வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை... புதுச்சேரியில் கொள்ளையர்களுக்கு வலை
புதுச்சேரி: புதுச்சேரியில் கவரிங் நகை வியாபாரி வீட்டில் 10 சவரன் தங்க நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்தவர் ராஜன். கவரிங் நகை வியாபாரியான இவர் உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 5 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ராஜன் தன்வந்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கை ரேகைகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் பீரோவை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக புதுச்சேரியில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications