என்னது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியா? பாதிரியர் பேச்சால் சலசலப்பு.! கடுப்பாகி வெளியேறிய ரங்கசாமி!
புதுச்சேரி : புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் பதவியேற்பு விழாவில் புதுச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி என்பதற்கு பதிலாக நாராயணசாமி என்று படித்ததால் அவர் கோபமடைந்து திடீரென விழா மேடையில் இருந்து வெளியேறினார்.
புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடங்கி நீண்ட நெடிய வரலாறும் பாரம்பரியமும் கொண்டதாகும்.
மேலும் இது கோரமண்டல் மிஷன் மற்றும் மலபார் மிஷன் என்று அழைக்கப்பட்டது. 1886ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரி - கடலூர் மாவட்டம் உயர்மறைமாவட்டம் ஆக உயர்த்தப்பட்டது.

பேராயர் பதவியேற்பு
இந்நிலையில் , புதுச்சேரி - கடலூர் உயர்மறை மாவட்டத்தின் 14-வது உயர் மறை மாவட்ட பேராயராக பிரான்சிஸ் கலிஸ்ட் பதவி ஏற்பு நிகழ்ச்சி உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இதில், தமிழகம் மற்றும் இந்தியாவின் பல மாவட்டங்களில் இருந்து வந்த பேராயர்கள், ஆயர்களும் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்டு பேராயரை வரவேற்றார்கள். இதில் சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார்.

முதல்வர் ரங்கசாமி
விழாவில் பேசிய பேராயர் முதலமைச்சர் ரங்கசாமி என்பதற்கு பதிலாக முதலமைச்சர் நாராயணசாமி மிகவும் திறமையானவர், எளிமையானவர் மக்களிடத்தில் நன் மதிப்பை பெற்றவர் என்று பேசிக் கொண்டிருந்தார்.

முதல்வர் நாராயணசாமி?
அப்பொழுது மேடையிலிருந்த சபாநாயகர் செல்வம் உள்பட சிலர் எழுந்து முதலமைச்சர் நாராயணசாமி இல்லை ரங்கசாமி என்று சொன்னவுடன் பேசி கொண்டிருந்த பேராயர் மன்னிக்கவும் முதலமைச்சரின் பெயரை தவறாக உச்சரித்து விட்டேன் என்றார்.

தீடீர் டென்சன்
இதைக் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் ரங்கசாமி திடீரென டென்ஷனாகி புதிதாக பதவியேற்ற பேராயருக்கு சால்வை அணிவித்து விட்டு விழா மேடையில் இருந்து கிடுகிடுவென்று வெளியேறினார். இந்த சம்பவம் விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேரவை தலைவர் செல்வமும் விழாவில் இருந்து வெளியேறினார். இதனால் சிறிது நேரம் விழா மேடை அருகே பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications