ஒத்த இடங்கூட இல்லையப்பா..அதிமுகவை கண்டா வரசொல்லுங்க...பாஜகவால் கட்சியே காணாமல் போன புதுவை பரிதாபம்!
புதுச்சேரி: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளிலேயே முதன் முதலாக புதுச்சேரியில்தான் ஆட்சியை கைப்பற்றியது. அந்தோ பரிதாபம்! 47 ஆண்டுகளிலேயே ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாத பரிதாப நிலைக்கு அதிமுகவை தள்ளிவிட்டிருக்கிறது பாஜகவுடனான கூட்டணி சேர்க்கை.
பாரதிய ஜனதா கட்சியானது ஒரு மாநிலத்தில் கூட்டணி சேருகிறது என்றாலே அந்த அணியில் இடம்பெறும் பெரிய கட்சிக்கு ஆபத்து என்பதுதான் நிகழ்கால வரலாறு. இதற்கு இதுநாள் வரை பட்டவர்த்தனமான உதாரணமாக இருந்தது பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூ.
இப்போது புதிய உதாரணமாகி நிற்கிறது அதிமுக. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசை வழக்கம் போல எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு ஆட்சி காலத்தின் இறுதியில் கலைத்துவிட்டு நிம்மதி அடைந்தது பாஜக. இதற்கு கூட்டாளியாக இருந்ததும் அதிமுகதான்.

தெனாவெட்டு பாஜக
இதையடுத்து தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக- அதிமுக கூட்டணி அமைத்தன. தொடக்கம் முதலே இந்த கூட்டணியில் பாஜக தன்னுடைய சவடால்தனத்தை காண்பித்து கொண்டே இருந்தது. முதல்வர் வேட்பாளர் ரங்கசாமியை ஏற்க முடியாது என தெனாவெட்டு காட்டியது. இதனால் ரங்கசாமி கோபித்துக் கொண்டு ஒதுங்கி இருந்தார்.

அதிமுக படுதோல்வி
இதனால் ஆடிப் போன அமித்ஷா அண்ட்கோ ரங்கசாமியை சமாதானப்படுத்தியது. அதேபோல் அதிமுகவுக்கான தொகுதி ஒதுக்கீட்டிலும் தம்முடைய டெல்லி மேலாதிக்கத்தை வெளிப்படையாக காட்டியது பாஜக. இத்தனை அமர்க்களத்துக்குப் பின்னர் நடந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10, பாஜக 6 இடங்களில் வென்றுள்ளது. சுயேட்சைகள் 5 பேர் வென்றுள்ளனர். ஆனால் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

முதல்வராகும் ரங்கசாமி
இப்போது ரங்கசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரப் போகிறார். என்னதான் ரங்கசாமி ஆட்சி அமைத்தாலும் அவரது ஆட்சியின் குடுமி பாஜக வசம்தான். ரங்கசாமி கட்சியையே உடைத்து சுயேட்சைகளுடன் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது கண்கூடான உண்மையும் கூட. இதில் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலைக்கு போனது அதிமுகதான்.

அன்று சாதித்த அதிமுக
1972-ல் அண்ணா திமுக தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளிலேயே 1974-ல் புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்றியது அதிமுக. கடந்த 40 ஆண்டுகளில் அதிமுக இல்லாத சட்டசபையே புதுச்சேரியில் இல்லை. இப்போது முதல் முறையாக அதிமுக இல்லாத சட்டசபை, புதுச்சேரியில் அமைகிறது.

அதிமுக வேட்பாளர்கள் தோல்வி
அதிமுகவின் அன்பழகன் உப்பளம் தொகுதியிலும், பாஸ்கர் முதலியார்பேட்டை, வையாபுரி மணிகண்டன் முத்தியால்பேட்டை, அசனா காரைக்கால் தெற்கு தொகுதி, ஓம்சக்தி சேகர் உருளையன்பேட்டை தொகுதிகளில் போட்டியிட்டனர். உப்பளம் தொகுதியில் 4,726 வாக்குகள் வித்தியாசத்திலும் முதலியார்பேட்டை தொகுதியில் பாஸ்கர் 4,038 வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தனர். முத்தியால்பேட்டை தொகுதியில் 997 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் வையாபுரி மணிகண்டன். உருளையன்பேட்டை தொகுதியில் ஓம்சக்தி சேகர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். வெறும் 1,681 வாக்குகள்தான் அவருக்கு கிடைத்தது. காரைக்கால் தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் 11,771 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.

பாஜகவுடனான கூட்டணி
பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் ஆகக் குறைந்தது தனித்து போட்டியிருந்தால் கூட கொஞ்ச நஞ்சம் மரியாதையுடன் ஒன்றிரண்டு இடங்களிலாவது ஜெயித்திருக்கலாம்... இப்போது ஒரு இடம் கூட கிடைக்காமல் கர்ணன் பாடலைப் போல, ஒத்த இடங்கூட இல்லையப்பா..அதிமுகவை கண்டா வரசொல்லுங்க என்கிற பரிதாப நிலைக்கு கட்சியை தள்ளிவிட்டனரே என விரக்தியில் நிற்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications