புதுச்சேரியில புலி உருமுது..உத்து பார்த்தா என்ன குரைக்குது? எலே நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்னு நிரூபிச்சுட்டலே
புதுச்சேரி: மயிலாடுதுறை அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவிய நிலையில், தற்போது புதுச்சேரியிலும் புலி நடமாட்டம் இருப்பதாக வீடியோக்கள் பரவின. இந்நிலையில் தெருக்களில் நடமாடியது புலியல்ல நாய் எனவும் மர்ம ஆசாமிகள் சிலர் நாய்க்கு புலி வேடமிட்டு தெருக்களில் உலாவை விட்டது தெரிய வந்துள்ளது..
கடந்த 2ஆம் தேதி இரவு மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் கண்டதாக பொதுமக்கள் கூறியதால் சிசி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் தேடும் பணியை தொடங்கினர்.

பின்னர் அங்கிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குத்தாலம் அருகே காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 7 நாட்களாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
சிறுத்தை நடமாட்டம்: ஆனாலும் அது சிக்கவில்லை. இந்நிலையில் போக்கு காட்டி வரும் சிறுத்தையானது அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் முகாமிட்டது. 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் கூறிய சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரியில் புலி: ஆனால் இப்போது வரை அந்த சிறுத்தை சிக்கவில்லை. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் குறிஞ்சி நகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக புலி நடமாட்டம் இருப்பதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இரவு நேரத்தில் உடலில் கோடுகளுடன் மர்ம விலங்கு ஒன்று அங்கும் இங்கும் உலாவுவதாக வீடியோக்களும் பரவின. இதனால் புதுச்சேரி மக்கள் புலி நடமாட்ட தகவல்களால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர்.
மக்கள் கடும் அச்சம்: ஒருவேளை அரியலூர் பகுதியில் நடமாடி வந்த சிறுத்தை தற்போது புதுச்சேரியில் தடம் மாறி வந்திருக்கலாம் எனவும் சிறுத்தையை புலி என நம்பி வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் வதந்திகள் பரவின. தொடர்ந்து சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த வீடியோ இரண்டு நாட்களாக உலா வந்தது. இதனால் மக்கள் கடும் பீதியும் அச்சமும் அடைந்த நிலையில் பொதுமக்கள் புலியினை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
புலியல்ல நாய்: இதையடுத்து அந்த வீடியோவை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையோ புலியோ அல்ல எனவும் நாய்க்கு சிலர் புலி வேடமிட்டு தெருக்களில் உலாவ விட்டதும் தெரியவந்தது. மேலும் தூரத்தில் இருந்து நாயை ஓட விட்டு வீடியோ எடுத்து அதனை புலி சிறுத்தை என சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டதும் தெரிய வந்தது. மேலும் அதிகாலை நேரங்களில் வயதானவர்கள் இந்த நாயை பார்த்தபோதுதான் புலி போன்று இருப்பதைக் கண்டு அச்சமடைந்து புலி நடமாட்டம் இருப்பதாக தெரிவித்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் நாய்க்கு புலி வேடமிட்டு தெருவில் அலையவிட்ட விஷமிகள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications