புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்… கூட்டத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
Recommended Video

புதுச்சேரி: நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த அரசின் 4 மாத செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. சபாநாயகர் வைத்தியலிங்கம் திருக்குறள் வாசித்து அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார்.
புல்வாமாவில் தீவீரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பேரவையில் இரங்கல்
மேலும், மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீத்தா வேதநாயகம் ஆகியோர் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 2 நிமிடம் மறைந்த அனைவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

தர்ணா போராட்டம்
இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் தொடங்கியதும், ஆளும் அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை எனக்கூறி, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்களும் தர்ணாவில் குதித்தனர்.

வெளிநடப்பு
பின்னர், ஆளும் காங்கிரஸ் அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை எனக்கூறி எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அரசு செலவினங்கள் மற்றும் திட்டங்களுக்கு அடுத்த 5 மாதங்களுக்காக ரூ 2 ஆயிரத்து 703 கோடியை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அன்பழகன் ஆவேசம்
முழுமையான பட்ஜெட்டை போட எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் முதல்வர் துணைநிலை ஆளுநர் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிமுக சட்டமன்றக்கட்சித்தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டினார்.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத ஆளும் கட்சியை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் எனவும் அன்பழகன் ஆவேசமாக கூறினார்.

மோதல் போக்கு
இதற்கிடையே, புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு இருந்து வருவதால், பெரும்பாலான மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications