புதுச்சேரியில் பாயும் பாஜக.. தமிழகத்தில் பம்முகிறதே கவனித்தீர்களா.. ஏன்.. என்னாச்சு?
புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஒரு நியாயம்.. தமிழகத்திற்கு மற்றொரு நியாயமா என்று பாஜகவை பார்த்து கேட்கிறார்கள், அக்கட்சி தொண்டர்கள்.
Recommended Video
ஏன்.. என்னாச்சு.. என்று கேட்கிறீர்களா. எல்லாம் தேர்தல் அறிக்கையால் வந்த பிரச்சினைதான்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வரும் 24ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட உள்ளதாக பாஜக மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்பி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தேர்தல் அறிக்கை
இது தொடர்பாக, புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்பி மற்றும் மாநில தலைவர் சாமிநாதன், புதுச்சேரியில் முதல்முறையாக மக்களின் கருத்தை பெற்று தேர்தல் அறிக்கையை பாஜக தயாரிக்கிறது. இதற்காக 50,000 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.

நாராயணசாமி தேர்தல்
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வரும் 24ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிடுகிறார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் மீண்டும் புதுச்சேரி வருகிறார்கள். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாதது ஏன் என மக்களுக்கே தெரியும். முழுமையான முதல்வராக செயல்படாத நாராயணசாமி தேர்தலில் மக்களை சந்திக்க பயந்து போட்டியிடவில்லை என்றார்.

கழகங்கள் இல்லாத தமிழகம்
இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்ன தெரியுமா? தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று, அதிமுகவுடன் கூட்டணி இறுதியாகும் வரை முழங்கி வந்தார்களே பாஜக தலைவர்கள்.. அப்படிப்பட்ட.. தமிழகத்தில், தேர்தலுக்கு அறிக்கை வெளியிடவேயில்லை பாஜக. அதற்கான எண்ணமும் அந்த கட்சிக்கு இல்லை.

ஆட்சி செய்வதாகவே நினைப்பு
புதுச்சேரியிலும் பாஜக ஜீரோதான். ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. ஆனால் அங்கே தனித்து ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது பாஜக. கிட்டத்தட்ட புதுச்சேரியை, தாங்கள் ஆளும் பிரதேசம் போலவே கருதத் தொடங்கியதன் விளைவுதான் இதுபோன்ற செயல்பாடுகள் என்கிறார்கள் மக்கள். தேர்தல் அறிக்கை மட்டுமல்ல.. தொகுதி பங்கீட்டிலும் புதுச்சேரியில், பாஜக பெரிய அண்ணன் தோரணையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது.

அதிமுகவுக்கு ரொம்ப கம்மி
4 எம்எல்ஏக்கள் உள்ள அதிமுகவுக்கு வெறும் 5 தொகுதிகளை கொடுத்துள்ளது பாஜக. பூஜ்யம் என்ற அளவுக்கு எம்எல்ஏக்கள், பலத்தில் உள்ள பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுவதால், இந்த 3 கட்சி அடங்கிய கூட்டணி 30 தொகுதிகளை பங்கீடு செய்துள்ளது.

பாம, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள்
தமிழகத்தில் என்னதான் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்து, 23 தொகுதிகளில்தான் போட்டியிட்டாலும், பாமக தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பல பாராட்டும் அம்சங்கள் இடம் பெற்றன. அதே மாதிரி, திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில்தான் போட்டியிட்டாலும், காங்கிரஸ் தங்களுக்காக ஒரு அறிக்கையை வெளியிட்டது. மது விலக்கிற்கு திமுகவை வலியுறுத்துவோம் என்று கூட அதில் கூறப்பட்டது.

கட்சி கொள்கையே இதில்தான்
கூட்டணியில்தானே இருக்கிறோம்.. நமக்கு ஏன் தனி தேர்தல் அறிக்கை என்று இந்த கட்சிகள் நினைக்கவில்லை. ஏனெனில், தேர்தல் அறிக்கை என்பது, வெறும் சம்பிரதாயம் அல்ல. அது ஒரு கட்சியின் செயல் திட்டத்தை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டக் கூடியது. ஒரு கட்சி எப்படிப்பட்ட கொள்கை உள்ள கட்சி என்பதை அவர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை வைத்து பார்த்து தெரிந்து கொள்ள முடியும். எனவே பாஜகவும் தமிழகத்திற்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை.

அதிமுகவுக்கு தர்ம சங்கடம்
"ஒருவேளை பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டாலும், இந்துத்துவா சார்ந்த கொள்கைகள் இடம் பெறும். அது அதிமுக வேட்பாளர்களுக்கு தர்ம சங்கடத்தை தரும். சிறுபான்மையினர் ஓட்டு சுத்தமாக கிடைக்காமல் போய்விடும். எனவே, அதிமுக தரப்பு அழுத்தத்தால், பாஜக அமைதியாக போய் இருக்கலாம்.. இப்படித்தான் நடந்திருக்கும்.." என்கிறார் ஒரு அரசியல் பார்வையாளர்.












Click it and Unblock the Notifications