புதுச்சேரியில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள்,. பறந்து வந்த ராகுல்.. காத்திருக்கும் சவால்!
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக வேண்டிய காங்கிரஸ் கட்சி, உட்கட்சி பிரச்சனையால் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. இதை அறிந்த ராகுல் காந்தி, தானே நேரடியாக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு பெரும் சவால்கள் காத்துக்கொண்டிருக்கிறது.
தென்னிந்தியாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் என்றால் அது புதுச்சேரி மட்டுமே. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக திரும்பி உள்ளனர்.
அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலகினார். அதன் பின்னர் தீப்பாய்ந்தான், மல்லாடிகிருஷ்ணாராவ் ,ஜான்குமார் என காங்கிரசில் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருக்கிறார்.
பெரும்பான்மை இழப்பு
இப்போதைய நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. அந்த கூட்டணிக்கு இப்போது 14 எம்.எல்.ஏக்களும், எதிர்க்கட்சியில் 14 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இதனால் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை இழந்துள்ளதால் முதல்வர் நாராயணசாமி ஆட்சியை காப்பாற்ற என்ன செய்வது என்று ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் தான் ராகுல் காந்தி நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக இன்று புதுச்சேரி வந்துள்ளார்.
ஏன் ராகுல் வந்தார்
ராகுல் காந்திக்கு முன் உள்ள பெரிய சவால் என்றால், கட்சியில் எம்எல்ஏக்களிடையே உள்ள அதிருப்தியை மாற்றி ஒன்றுபட வைப்பது. யார் சொன்னாலும் கேட்பார்களா, ஒன்றுபடுவார்களா என்றொல் பதில் இல்லை. ஆனால் ராகுல் காந்தி சொன்னால் காங்கிரஸில் யாரும் மரியாதை கொடுப்பார்கள், நம்பிக்கையுடன் தொடர்வார்கள். அதனால் தான் ராகுல் காந்தியே நேரடியாக புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
ராகுலுக்கு பொறுப்பு
இனி ஒரு எம்எல்ஏ கூட காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகாமல் காக்க வேண்டிய பொறுப்பு நாராயணாசாமிக்கு உள்ளதோ, அதைவிட அதிகமான பொறுப்பு ராகுல் காந்திக்கு உள்ளது. ராகுல் காந்தியின் அணுகுமுறை பிடித்து போனதாலயே கூட்டணி கட்சியான திமுக, காங்கிரஸ் கட்சியிடம் புதுச்சேரியில் அத்தனை பிரச்சனைக்கும் நடுவில் அரவணைத்து செல்கிறது.
நாராயணசாமி
தற்போதைய நிலையில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை சமாதானம் செய்வதுடன், பாஜகவின் வலையில் சிக்காமல் எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை காக்கவே ராகுல் காந்தி வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று கிரண் பேடியின் நீக்கத்தை வரவேற்ற நாராயணசாமி, தற்போதைய பிரச்னையை தீர்க்க ராகுலே வந்ததைத்தான் பெரிதும் வரவேற்று இருப்பார்.
சவால்கள்
ராகுல் காந்தி, புதுச்சேரியில் அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளை ஒன்றுபடுத்தி, தேர்தலை சந்திக்க வைத்தால், அது நிச்சயம் அவருக்கு பெரிய புகழை சேர்க்கும். தற்போது பாஜக அங்கு கால் ஊன்ற அதிக வேலை செய்து வருவதால் அதை முறியடிக்க சரியான திட்டங்களை ராகுல் முன்னெடுப்பதில் தான் பெரிய சவாலே உள்ளது. இந்த சட்டசபை தேர்தல் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.