சண்டை போடாதீங்க.. கொரோனாவைப் பாருங்க.. கிரண்பேடி நாராயணசாமிக்கு மக்கள் கண்டிப்பு!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நடுவிலும் யாருக்கு அதிகாரம் என்பதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கொரோனா அச்சுறுத்தலில் உள்ள சூழலில் இருவரும் இணைந்து பணியாற்றாமல் மாறி மாறி விமர்சித்து வருவதை மக்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆளுநர் கிரண்பேடியை நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
உத்தரவிட முடியாது
அப்போது அவர் கூறுகையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு ஆய்வுக்கு செல்லலாம். ஆனால் அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவிட முடியாது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு கருத்துகளை அனுப்ப வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுவார் என நினைக்கிறேன். அவர் மீறி செயல்பட்டால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
கிரண்பேடி பதிலடி
இதைத்தொடர்ந்து வாட்ஸ்அப்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதிலுக்கு விமர்சித்திருந்தார். அதில், தற்போதைய தீர்ப்பின்படி புதுச்சேரி நிர்வாகமானது யூனியன் பிரதேச சட்டம் மற்றும் நிதி மற்றும் நிர்வாக விதிகளின்படி நடக்கிறது என்பது தெளிவாகிறது. ஏற்கெனவே வெளியான தீர்ப்புகளில் தேர்தல் ஆணையர் நியமனம், இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் ஆகிய தீர்ப்புகளிலும் இதே சட்டங்களும், விதிகளும் உறுதி செய்யப்பட்டன.
முதல்வருக்கே தோல்வி கிடைத்தது
கடந்த மூன்று நீதிமன்ற வழக்குகளிலும் முதல்வர் உண்மையில் தோல்வியடைந்தார். ஆனால், மக்களிடம் அதை பகிர்ந்து கொள்ளவில்லை. தற்போது அதை நேரடியாக தெரிவிக்க நிர்பந்திக்கப்படுகிறேன். மக்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும். இத்தீர்ப்பு ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸுக்கான வெற்றி அல்ல. நாங்கள் இங்கு வெல்லவோ, தோற்கவோஇல்லை. சேவை செய்யவே உள்ளோம். நாடாளுமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டங்களையும், விதிகளையும் அதை குடியரசுத்தலைவர் வழங்கியதையும் பின்பற்றி செய்கிறோம்.
மிரட்டாதீங்க
அரசு அதிகாரிகள் அச்சமின்றியும், பாரபட்சமின்றியும் பணியாற்ற முதல்வர் அனுமதிக்கவேண்டும். அத்துடன் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட அவர்களை மதிக்கவும் வேண்டும் என்றும் கோருகிறேன். மூன்று தீர்ப்புகளும் இந்திய அரசுக்கும், ஆளுநருக்கும் ஆதரவாக வந்த பிறகு, புதுச்சேரி மாநிலமல்ல என்பதை முதல்வர் ஏற்றிருப்பார் என்று நினைத்திருந்தேன். நான் இங்கு ஆளுநராக வருவதற்கு முன்பே புதுச்சேரி யூனியன்பிரதேச சட்டம், வணிக மற்றும் நிதி சட்டங்களின் கீழ்தான் நிர்வகிக்கபடுகிறது என்று கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
சண்டை வேண்டாமே
புதுச்சேரி மக்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் உள்ள சூழலில் இருவரும் நீதிமன்றம் தீர்ப்பின்படி மாநில வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றாமல், மாறி மாறி விமர்சித்து வருவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி சண்டை போடுவதை விட்டு விட்டு இப்போதாவது சேர்ந்து செயல்பட்டு கொரோனாவைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.