புதுச்சேரி பட்ஜெட்: 2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி
புதுவை: புதுச்சேரி சட்டசபை இன்று கூடியதை அடுத்து 2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார்.
Recommended Video
புதுவையில் பா.ஜ.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் முதல்வராக ரங்கசாமி இருந்து வருகிறார்.
பட்டாம்பூச்சி விளைவா? புதுச்சேரிக்கு வந்த பீகார் காற்று! பட்ஜெட்டை தடுத்த பாஜக! ரங்கசாமி அதிர்ச்சி?
ரூ.11 ஆயிரம் கோடிக்கு தயாரிப்பு
இந்த நிலையில், புதுவையில் இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு அதனை நேரடியாக சமூக வலைதளம் மற்றும் கேபிள் டி.வி.க்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பட்ஜெட் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் மாநிலத்தின் பட்ஜெட் ரூ.11 ஆயிரம் கோடிக்கு தயாரிக்கப்பட்டது.
ஒப்புதல் கிடைக்கவில்லை
தொடர்ந்து பட்ஜெட்டுக்கான கோப்புகளை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எப்படியும் அனுமதி கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் தேதி நெருங்கிய நிலையிலும் பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால், முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். இதையடுத்து கடந்த மாதம் 10-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
மத்திய அரசு ஒப்புதல்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சட்டசபை வளாகத்துக்கு வந்து தனது உரையை தொடங்கினார். அவர் உரையை முடித்ததும் திடீரென காலவரையறையின்றி சபை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் தான் சபை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது புதுவையின் பட்ஜெட் ரூ.10 ஆயிரத்து 700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று புதுவையில் சட்டசபை கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் செய்தார்
அதன்படி இன்று காலை 9. மணியளவில் முதல்வரும், நிதி அமைச்சருமான ரங்கசாமி சட்டசபைக்கு வந்தார். தொடர்ந்து 9.30 மணியளவில் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் ஒன்றை வாசித்து பட்ஜெட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக இந்த இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நேரடியாக இணையதளம் மற்றும் கேபிள் டிவி வழியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.