தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சில் சிறப்பு பிரார்த்தனை.. புதுச்சேரியில் ஹேப்பி கிறிஸ்துமஸ்
புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, வெளிநாட்டினர் உள்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி இயேசு பிறப்பு பெருவிழா கிறிஸ்துமஸ் பண்டியகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியிலும் கிரிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கடற்கரை சாலையில் பிரெஞ்சுகாரர்களால் கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த கப்ஸ் தேவாலயத்தில் பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய 3 மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தொடர்ந்து குழந்தை ஏசுவின் சொரூபம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு குடிலில் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதே போல் ரயில் நிலையம் எதிரே உள்ள இருதய ஆண்டவர் பேராலயம், மிஷன் வீதியில் உள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம், அரியாங்குப்பம் மாதா ஆலயம், நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அங்கிருந்த மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நள்ளிரவு 12.01 மணிக்கு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்துவர்கள், தங்களது அருகில் இருந்தவர்களுடன் கைகளை குலுக்கி ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பறிமாரிக்கொண்டனர்.













Click it and Unblock the Notifications