1991-ல் 47 ஆயிரம் கிலோ தங்கத்தை ரகசியமாக இங்கிலாந்துக்கு விமானத்தில் அனுப்பிய இந்தியா! ஏன் தெரியுமா?
சென்னை: 1991 ஆம் ஆண்டு, கடும் அந்நியச் செலாவணி நெருக்கடியில் சிக்கிய இந்தியா, நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றும் அவசர முயற்சியாக சுமார் 47,000 கிலோ தங்கத்தை ரகசியமாக இங்கிலாந்துக்கு விமானம் மூலம் அனுப்பியது. 405 மில்லியன் டாலர் அவசர கடனைப் பெற மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, பின்னர் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் நிதி நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், சிக்கன நடவடிக்கையை பின்பற்ற பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக நாட்டு மக்கள் ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்தியா தனது தேவைக்கு பெரும்பகுதியை இறக்குமதி மூலமே ஈடுகட்டி வருகிறது.

47 ஆயிரம் கிலோ தங்கம்
இதனால், அதிக அளவில் அந்நிய செலவாணி வெளியேறி வருகிறது. இது ரூபாயில் நேரடியாக தாக்கம் செலுத்துவதால் இதனை கட்டுப்படுத்தவே மோடி இவ்வாறு அறிவித்து இருக்கிறார். நாட்டின் பண மதிப்பை தங்க கையிருப்பை அடிப்படையாக கொண்டே நிர்ணயிக்கப்படும் சூழலில் இந்தியா கடந்த 1981 ஆம் ஆண்டு 47 ஆயிரம் கிலோ தங்கத்தை இங்கிலாந்துக்கு அளித்தது. அவ்வளவு தங்கத்தை இந்தியா, இங்கிலாந்துக்கு அனுப்பியது ஏன்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
1991-ஆம் ஆண்டில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகக் குறைந்த நிலைக்குச் சென்றது. அதாவது, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வெறும் 1.2 பில்லியன் டாலராகக் குறைந்தது. இந்த தொகையானது வெறும் 2 வார கால இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதனால்,ரிசர்வ் வங்கி (RBI) மூலம் சுமார் 47 டன் (47,000 கிலோ) தங்கத்தை ரகசியமாக அடமானம் வைத்து, விமானம் மூலம் இங்கிலாந்துக்கு இந்தியா அனுப்பியது.
405 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்
அப்போது ஆளுநராக இருந்த எஸ் வெங்கடரமணன் தலைமையிலான ரிசர்வ் வங்கி பல அவசரத் தீர்வுகளை ஆராய்ந்த பிறகு இந்த முடிவை எடுத்தது. அந்நேரத்தில் இந்தியாவின் வெளிநாட்டு நாணய கையிருப்பு, ஒரு வார இறக்குமதிக்கே போதுமான அளவுக்கு மட்டுமே இருந்தது. இதனால், வெளிநாட்டு வங்கியொன்றில் தங்கத்தை அடமானம் வைத்து சுமார் 405 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெற முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் தங்கம் என்பது பாதுகாப்பு, பெருமை மற்றும் உணர்வுகளின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால், அரசின் இந்த நடவடிக்கையை சிலர் பொருளாதார நெருக்கடியாக மட்டுமல்லாமல், தேசிய அவமானமாகவும் கருதினர். அந்நேரத்தில், இந்தியா அவசரமாக வெளிநாட்டு நாணயத்தை திரட்ட வேண்டிய சூழ்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 20 டன் தங்கத்தையும் விற்று 215 மில்லியன் டாலர் திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கி எடுத்த முயற்சி
இந்த நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள், சந்திர சேகர் பிரதமராக இருந்த காலத்திலேயே (நவம்பர் 1990 - ஜூன் 1991) தொடங்கப்பட்டன. அவர் சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்ட்ரிய) தலைமையிலான இடைக்கால அரசை வழிநடத்தி வந்தார். 1990-களின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த அவசர தங்க அடமான நடவடிக்கைகள், இந்தியா வெளிநாட்டு கடன் செலுத்தும் பொறுப்புகளில் தவறுவதிலிருந்து தப்பிக்க உதவியதுடன், கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பிரதமர் பிவி நரசிம்ம ராவ் தலைமையிலான புதிய அரசு முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை தொடங்கும் வரை நாட்டை நிலைநிறுத்தவும் உதவின.
1991 ஜூன் 21-ஆம் தேதி ராவ் அரசு பொறுப்பேற்றது. அதற்கு சில வாரங்களுக்கு முன்பே, இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை விமானம் மூலம் வெளிநாட்டுக்கு கொண்டு சென்று அடமானம் வைத்தது. "தங்கத்தை அடமானம் வைக்கும் முயற்சியை இந்திய ரிசர்வ் வங்கியே எடுத்தது. அதற்கு அரசின் அனுமதி அவசியமாக இருந்தது; அரசும் அனுமதி அளித்தது. இத்தனைக்கும் அப்போது சந்திர சேகர் தலைமையிலான இடைக்கால அரசு இருந்தது.
எனினும், அது மிகத் துணிச்சலான முடிவாக இருந்தது. அந்த அரசு மிகுந்த ஞானத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தியது. அதுவே மாற்றத்தின் தொடக்கமாக அமைந்தது" என்று இந்த செய்தியை முதலில் வெளியிட்ட பத்திரிகையாளர் சங்கர் அய்யர் தனது 2012-ஆம் ஆண்டு வெளியான Accidental India: A History of the Nation's Passage Through Crisis and Change என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.














Click it and Unblock the Notifications