புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவை.. திமுக ஆட்சி உதயமாகும்..உறுதியாக சொன்ன மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி: திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கும் தேவை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். விரைவில் திமுக ஆட்சி புதுச்சேரியில் உதயமாகும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமாரின் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்; திராவிட இலக்கியத்தின் தலைநகரம் என புதுச்சேரியை கூறலாம். புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு.
கலைஞர் கொள்கை உரம் பெற்ற ஊர் புதுச்சேரி. தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது. புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசமே உண்டு என்று கூறினார். புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசம் உண்டு என தெரிவித்தார். அனைவரையும் தம்பி என்று அழைத்தவர் அண்ணா..உடன்பிறப்பே என்று அழைத்தவர் கருணாநிதி. அவர் வழியில் வழிநடத்தும் நான் உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுகிறேன் என்றார்.

புதுச்சேரி
புதுச்சேரியில் தற்போது மதவாத ஆட்சி நடைபெறுகிறது இந்த ஆட்சியால் தற்போது மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மதவாத ஆட்சி ஏற்பட வழி வகுத்து விடக்கூடாது. லோக்சபா தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெள்ள வேண்டும் என்று கூறுவது இதனால்தான். எனவே லோக்சபா தேர்தலுக்காக இப்போதில் இருந்தே உழைப்போம் என்று கூறினார்.

திமுக ஆட்சி
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரியில் திமுக ஆட்சி மீண்டும் மலரும்..தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம்..புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி தேவை. புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி உதயமாகும் என்று உறுதியாக கூறினார்.

ஆளுநர் ஆட்டிப்படைக்கும் ஆட்சி
புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிட கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுநர் ஆட்டி படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறதுபுதுச்சேரியில் தற்போது நடக்கும் ஆட்சி மக்களுக்காக நடைபெறவில்லை. புதுச்சேரியில் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

நாராயணசாமி
புதுச்சேரியில் தின தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு திமுக தான் தலைமை. ஆனால் புதுச்சேரியில் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடைபெற்றது. எந்த கட்சியும் பெரியது, சிறியது இல்லை. எல்லா கட்சிகளுக்கும் பலம் உள்ளது என்று தெரிவித்தார்.

கூட்டணி
ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்திருக்கிறது. இனி திமுக ஆட்சி மலரும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதைப் பார்த்தால் விரைவில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர். காங்கிரஸ்தான் தலைமை வகிக்கும் என்று நாராயணசாமி கூறிய சில நாட்களில் அதற்கு பதில் தரும் விதமாக பகிரங்கமாக மேடையில் புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications