புதுச்சேரியின் மூக்கை துளைத்த கறிதோசை.. ரகம் ரகமா தோசைகள்.. வித விதமா சட்னி.. தோசை திருவிழா கோலாகலம்
புதுச்சேரி: கடந்த வருடம் பிப்ரவரி முதல் இந்த பிப்ரவரி மாதம் வரையில் இந்தியாவில், 29 கோடி தோசைகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக உணவு விநியோக தளமான ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.. அந்த அளவுக்கு தோசை பிரியர்கள் இந்தியாவில் உள்ளனர்.. இந்நிலையில், புதுச்சேரியில் தோசைக்கென்றே ஒரு திருவிழா நடந்துள்ளது.. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்திலும் வைரலாகி வருகின்றன.
தென்னிந்தியர்கள் அதிகம் விரும்பும் காலை உணவாக தோசை திகழ்ந்து வருகிறது.. இந்தியாவில் உருவான இந்த தோசைக்கு வெளிநாடுகள் வரை தோசை பிரியர்கள் அதிகமாக உள்ளனர்..

கடந்த 5ம் நூற்றாண்டில் கர்நாடகா உடுப்பியிலுள்ள கோயில் தெருக்களில் முதன்முதலில் இந்த தோசைகள் உருவானதாக சொல்கிறார்கள்.. தென் இந்திய மாநிலங்களில் தோசைக்கு ஒவ்வொரு பெயர் இருந்தாலும், 10ம் நூற்றாண்டில் உள்ள தமிழ் இலக்கியத்தில் "dosa" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
அதேபோல முதலாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் தோசை என்கிற சொல் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
தோசை பிரியர்கள்
அரிசி, உளுந்து, வெந்தயம் போன்ற அனைத்தும் கலந்த மாவில் தோசை சமைத்து சாப்பிடும்போது, ஆரோக்கியத்திலும் நன்மை தருகிறது. இந்த பொருட்களை ஊற வைத்து, 8 மணி நேரம் புளித்து வைத்து, செய்யும் மாவில் லாக்டிக் அமில பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளதால், முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவாக தோசை கருதப்படுகிறது.
ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை உள்ளவர்கள், கம்பு, கேழ்வரகு, சம்பா, கோதுமை போன்ற தானியங்களை பயன்படுத்தியும் தோசைகளை சுடுகிறார்கள். இத்தனை முக்கியத்துவம் இருப்பதால்தான், மார்ச் 3ம் தேதி உலக தோசை தினமாகவே கொண்டாடி வருகிறோம்.
அதிலும் புதுச்சேரியில் தோசை திருவிழா என்ற பெயரில் வருடா வருடம் திருவிழா நடப்பது பலரது கவனத்தையும் பெற்றுவிடுவது வாடிக்கையாகும்..
தோசை திருவிழா
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஆர்.கே.என். கிராண்ட் ஓட்டலில் அமைந்துள்ள உயர்தர சைவ ரெஸ்ட்டாரண்டில் இப்படியான புதுமையான தோசை திருவிழா நடந்துள்ளது.
இந்த தோசை திருவிழாவில், ராஜா ராணி, வெற்றிலை, இளநீர், சிறுதானியங்கள், மொடக்கத்தான், ராகி, கம்பு, கொள்ளு, வெஜ் சிக்கன், வெஜ் மட்டன், வெஜ் இறால், உலர் பழம், சாக்லேட் தோசைகள் உள்ளிட்ட 40 வகை சுவையான தோசைகள், 9 வகையான சட்னிகளுடன் தோசை திருவிழாவில் பரிமாறப்படுவதாக சில நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது.
நாளை வரை நீட்டிப்பு
இப்படியொரு அறிவிப்பு வெளியானதுமே, இந்த தோசை திருவிழாவில், பங்கேற்க தோசை பிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்க ஆர்வம் காட்ட துவங்கிவிட்டார்கள்.. .
அந்தவகையில், தோசை திருவிழா கடந்த 28ம் தேதி ஆரம்பமானது.. நேற்று 8ம் தேதிதான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்களின் வரவேற்பால் நாளை அதாவது 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தோசை திருவிழாவில் காளான் தோசை, ராஜா ராணி தோசை, கறி தோசை, மட்டன் தோசை, இறால் தோசை, மகாராஜா தோசை, மில்லட் தோசை, இளநீர் தோசை, என 40 வகையான தோசைகள் தயார் செய்யப்பட்டன..
வகை வகையான சட்னி
இந்த தோசைக்கு தோதாக, புதினா சட்னி, மல்லி சட்னி, கடலை சட்னி, தேங்காய் சட்னி, வெங்காய சட்னி என 9 வகையான சட்னிகள் தயார் செய்யப்பட்டன.. ஒவ்வொரு தோசையையும், ஒவ்வொரு சட்னியுடன் வைத்து உணவுப்பிரியர்கள் ருசித்து சாப்பிட்டார்கள்..
புதுச்சேரியில் இந்த திருவிழா நடந்தாலும், கடலூர், விழுப்புரம், திண்டிவனம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் குடும்பத்துடன் பங்கேற்றனர்.. தோசை ஒவ்வொன்றும் ருசியாக இருந்ததது, தங்களுக்க புதுவிதமான அனுபவத்தை தந்ததாகவும், பிள்ளைகளுடன் இந்த திருவிழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறி செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications