சாமி vs சாமி.. டம்மி முதல்வர் ரங்கசாமி.. பாஜக வரலாறே இதுதான்.. விட்டு விளாசும் நாராயணசாமி..!
புதுச்சேரி: நில உரிமை அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு வழங்கியதன் மூலம், முதலமைச்சர் ரங்கசாமி டம்மி முதல்வர் என்று தான் கூறியது நிரூபணமாகியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிரா அரசியல் விவகாரம், புதுச்சேரி அரசியல் சூழல், பாஜக ஆட்சி மற்றும் ஆளுநருக்கான அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து பாஜக ஆட்சியை கொண்டு வர அனைத்து முயற்சியையும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எடுத்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளனர். பாஜக தேர்தலில் வென்று ஆட்சி அமைப்பது அல்ல.
புதுச்சேரி, கர்நாடகா, மத்திய பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, கோவா என பல மாநிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களை குறைவாக வைத்துக்கொண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றத்தை செய்துள்ளது. சிவசேனா கட்சியினர் துரோகிகளை ஓடஓட விரட்டுவோம் என்று கூறியுள்ளனர். புதுச்சேரி மக்களுக்கும் அந்த உணர்வு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ரங்கசாமி 'டம்மி’..! ’சூப்பர் முதல்வராக’ தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார்! நாராயணசாமி காட்டம்..!
புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு செயல்படாத அரசாக இருக்கிறது. மக்களை பற்றி கவலைப்படவில்லை. வெளிநாட்டு மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலையிடம் கோடி கணக்கில் லஞ்சம் பேசப்படுகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எளிதாக கிடைக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் புதுச்சேரி பின்நோக்கி சென்றுவிடும். ஏன் நிரந்தர துணை நிலை ஆளுநரை மத்திய அரசு போடவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
ஜிப்மர் விவகாரம்
தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவமனை சரித்திரத்திலேயே பேராசிரியர்கள் தெருவில் இறங்கி போராடியது இல்லை. ஆனால் இப்போது மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி சீர்கெட்ட நிர்வாகம் நடக்கிறது. பெயர் பெற்ற ஜிப்மரை சீரழித்துவிட்டார்கள். ஜிப்மரை கவனிக்காத மத்திய அரசால் புதுச்சேரியில் எப்படி வளர்ச்சியை கொண்டுவர முடியும். கிரண்பேடி காலத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.
ஆளுநர் அதிகாரம்
சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், துணை நிலை ஆளுநருக்கு நில உரிமை அதிகாரத்தை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கூட அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மாநிலம். முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்த துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. எனக்கு கிடைத்த தகவல்படி பொது சொத்துகளை தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்கவே ஆளுநருக்கு நில அதிகாரத்தை கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மீது விமர்சனம்
முதலமைச்சர் தனது அதிகாரத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் விட்டு கொடுத்துவிட்டார். ஆளுநர் சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் இருப்பதாக நான் கூறியது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. புதுவையில் உள்ள நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்தார்.