புதுச்சேரி சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. தடுக்க சென்ற காவலர்கள் 4 பேர் படுகாயம்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. மோதலை தடுக்கச் சென்ற 4 சிறைக்காவலர்கள் மீதும் கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறை உள்ளது. இங்கு 200 விசாரணை கைதிகள் மற்றும் 100 தண்டனை கைதிகள் என 300 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறையில் செல்போன் உள்ளிட்ட அனைத்து தகவல்தொடர்பு சாதனங்களும் கைதிகளுக்கு சர்வசாதாரணமாக கிடைத்து வருகிறது. இதனால் கைதிகள் சிறையில் இருந்தவாறே செல்போன் மூலம் புதுச்சேரியில் உள்ள தொழிலதிபர்களை தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டுவது, வெடிகுண்டு வீச்சு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோதல்
அண்மையில் கூட சிறையில் இருந்த விசாரணை கைதி ஒருவர், செல்போன் மூலம் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் காலாப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகளால் புதுச்சேரி நகரில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துகொண்டே போகிறது. மேலும் சிறைக்கைதிகளே தங்களுக்குள் பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டு, தங்களில் யார் பெரியவர் என்கிற ரீதியில் அடிக்கடி சிறையில் மோதல்கள் நடந்து வருகின்றன.

யார் பெரியவன்
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விக்கிராஜா, அஸ்வின் ஆகியோருக்கு இடையே யார் பெரியவன் என்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியது. அப்போது கைதிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்புகம்பிகள், உருட்டுகட்டைகளை கொண்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கைதிகள் திடீரென மோதிக்கொண்டதால் சிறை வளாகத்தில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டது.

வார்டன்கள் முயற்சி
இதை பார்த்த சிறை வார்டன்கள் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்றுள்ளனர். அப்போது கைதிகள், வார்டன்களையும் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் கைதி விக்கிராஜா மற்றும் மோதலை தடுக்க முயன்ற வார்டன்கள் ஜீவரத்தினம், சக்கரவர்த்தி, பாவாடைசாமி, ரூபச்சந்திரன் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம்
இதனையடுத்து அவர்களை சக காவலர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய சிறையில் கைதிகள் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications