புதுவை க்ளைமாக்ஸ் ஓவர்... சபாநாயகர் பிளஸ் 2 அமைச்சர்கள் பதவி.. பாஜக நெருக்கடிக்கு பணிந்தார் ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் நீடித்து வந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. பாஜகவின் நெருக்கடியை ஏற்று அக்கட்சிக்கு சபாநாயகர் பதவி மற்றும் 2 அமைச்சர்கள் பதவி வழங்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொண்டுள்ளார் என்கின்றன தகவல்கள். இதனையடுத்து வரும் 10-ந் தேதி புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்க கூடும் என கூறப்படுகிறது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த மாதம் 7-ந் தேதியே முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார்.

துணை முதல்வர் கேட்ட பாஜக
இதன்பின்னர் சில நாட்களிலேயே ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் புதுச்சேரியில் துணை முதல்வர் மற்றும் 3 அமைச்சர்கள் பதவியை பாஜக கேட்டது. இதனை என்.ஆர். காங்கிரஸ் ஏற்க மறுத்தது.

என்.ஆர்.காங்- பாஜக பேச்சு முறிவு
இதையடுத்து சபாநாயகர் பதவி மற்றும் 2 அமைச்சர் பதவியை பாஜக கேட்டது. 2 அமைச்சர்கள் பதவி மட்டும்தான் தருவோம்; சபாநாயகர் பதவி எங்களுக்குதான் எனவும் என்.ஆர். காங்கிரஸ் அடம்பிடித்தது. இதனால் என்.ஆர். காங்கிரஸுடனான பேச்சுவார்த்தைகளை பாஜக நிறுத்த உத்தரவிட்டிருந்தது.

ரங்கசாமி திடீர் ஒப்புதல்
என்.ஆர். காங்கிரஸ்- பாஜக இடையேயான இந்த மோதலால் புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பங்கேற்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில் பாஜகவின் நெருக்கடிக்கு பணிந்து சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவியை தருவதற்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூன் 10-ல் அமைச்சரவை பதவியேற்பு?
இதனால் புதுச்சேரியில் நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வர உள்ளது. மேலும் வரும் 10-ந் தேதி புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இருப்பினும் சபாநாயகர் பதவி, பாஜகவுக்கு போவதால் ரங்கசாமி அரசுக்கு தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications