புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் காலமானார்
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச முன்னாள் முதல்வரும், திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வீ.ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
இவர் 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி மாநிலத்தில் திமுக அமைச்சரவையில் முதல்வராக பணியாற்றியுள்ளார். மேலும் 1985 ஆம் ஆண்டு நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தேர்வானவர்.
தொடர்ந்து இதே தொகுதியில் இருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வான ஜானகிராமன், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
78 வயதான ஆர்.வி.ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜானகிராமனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை முதல் நாளை காலை 7 மணி வரை வைக்கப்படுகிறது. இதனையடுத்து அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூரில் நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்த திமுக எம்பி கனிமொழி, ஆர்.வி.ஜானகிராமனை அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு வந்து பார்த்து உடல் நலம் விசாரித்து விட்டுச் சென்றார் என்பது நினைவிருக்கலாம். ஆர்.வி.ஜானகிராமன் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.