கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு.. தண்ணீரால் சூழப்பட்டு தீவாக மாறிய ஏனாம் பிராந்தியம்!
புதுச்சேரி : புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஏனாமின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களில் கடந்த மாதம் முதல் பெய்த கனமழையால் கிழக்கு கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் 7 நாட்களாய் நகரம் மற்றும் கிராமப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அண்டை மாநிலங்களில் மழை நின்ற நிலையில், ஏனாமில் மழை வடிந்து, சகஜ நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில், மீண்டும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஏனாமின் தாழ்வான பகுதிகளான பாலயோகி நகர், குரு கிருஷ்ணாபுரம், கோன வெங்கட்ட ரத்னம் நகர், அய்யன்னா நகர், பரம்பேட்டா, பிரான்ஸ்டிப்பா, ராஜுவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும் நீர் வரத்து அதிகரித்தால் ஆயிரத்திக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள முதியோர் இல்லத்தில் உணவு தயாரித்து படகு மூலம் விநியோகிக்கப்படுகிறது.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்..விரைந்து செயல்படுத்த தமிழக அரசு வலியுறுத்தல்..அடம் பிடித்த கர்நாடகா
மாவட்ட நிர்வாகம் எந்த நிவாரணமும் வழங்க முன் வரவில்லை என குற்றம்சாட்டியுள்ள புதுச்சேரி அரசின் சிறப்பு பிரதிநிதி, ஏனாம் முதியோர் இல்லத்தில் தினமும் ஆயிரம் பேருக்கு இரு வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏனாமில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்ததால், மீட்பு பணிக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஏனாமில் இருந்து விடைபெற்றனர். இதற்கு பேரிடியாய் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடலோர பகுதி, தாழ்வான பகுதி மற்றும் கோதாவரி ஆற்று பகுதிகளில் மழை நீர் ஆறாக ஓடுகிறது. வெள்ளத்தில் ஏழு நாட்களாய் தத்தளித்த மக்கள் மெல்ல சகஜ நிலைக்கு மக்கள் திரும்ப முயலும் நேரத்தில், தற்போது மீண்டும் பெய்து வரும் கனமழையால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.