பாஜக திரும்ப ஜெயிச்சா.. ரங்கசாமி CM இல்ல.. நகராட்சி சேர்மன்.. சிவி சண்முகம் சரமாரி அட்டாக்!
புதுச்சேரி: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார், நகராட்சி சேர்மன் ஆகிவிடுவார் என அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
மத்திய பாஜக அரசையும், புதுச்சேரி அரசையும் கண்டித்து புதுச்சேரியில் அதிமுக சார்பில் இன்று புதுச்சேரி ரோடியர் மில் திடலில் இருந்து சட்டசபை பின்புறம் வரை கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்.பி, கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு சிதைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, புதுச்சேரியை ஆளும் அரசு ரேஷன் கடைகளைத் திறக்காதது, பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் அதிமுக சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்.பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்காண அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிவி சண்முகம், புதுச்சேரியில் கூட்டணி அரசுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது என பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், 1980க்குப் பிறகு 40 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியில் ஆள்வது திமுக, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இந்த 4 கட்சிகளும் தான். எந்த வளர்ச்சியாவது இருக்கிறதா? ஒவ்வொரு தேர்தலிலும் இந்த 4 கட்சிகளும் தான் ஆட்சி அமைக்கிறார்கள். மற்றவர்களாவது எவ்வளவோ தேவலை. இந்த பாஜக இருக்கிறதே.. இன்னும் கொஞ்சம் ஏமாந்து, எம்.பி தேர்தலில் ஓட்டு போட்டு, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார், நகராட்சி சேர்மன் ஆகி விடுவார்.
இந்தியா முழுவதும் மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை மத்திய பாஜக அரசு சிதைக்கிறது. கேரளா, கர்நாடகா முதல்வர்கள் டெல்லியில் அமர்ந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெறும் வாய்ச் சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்" என்று கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications