கேட்டை திறப்பியா மாட்டியா.. கஞ்சா போதை.. கேட் கீப்பரிடம் சண்டை.. வெளுத்தெடுத்த மக்கள்!
புதுச்சேரி: ரெயில்வே கேட்டை திறக்காததால் கேட் கீப்பரை சரமாரியாக தாக்கிய போதை வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கேட் கீப்பரை தாக்கிய வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே அரும்பார்த்தபுரத்தில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி ரெயில் செல்வதற்காக கேட் போடப்பட்டது. அப்போது அந்த வழியாக மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 8 வாலிபர்கள் கேட்டை உடனடியாக திறந்துவிடக்கோரி, அங்கு பணியிலிருந்த கேட் கீப்பர் தேவசகாயராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில் சென்றதும், கேட்டை திறப்பதாக தேவசகாயராஜ் கூறியதால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் தேவசகாயராஜை சரமாரியாக தாக்கினர். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கேட் கீப்பர் தாக்கப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள், அந்த வாலிபர்களை சுற்றிவளைத்து தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த அவர்கள், தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த காயமடைந்த கேட் கீப்பர் தேவசகாயராஜுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அந்த வாலிபர்கள் கேட் கீப்பர் தேவசகாயராஜுவை மட்டுமல்லாது, அந்த பகுதி மக்களை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் அந்த வாலிபர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் கேட் கீப்பரை தாக்கியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.