அடப்பாவிகளா! இதை கூட விட மாட்டீங்களா.. புதுச்சேரியில் திடீரென மாயமான.. போர்வீரர் நினைவிட ஹெல்மெட்
புதுச்சேரி: புதுவை கடற்கரைச் சாலையில் போர்வீரர் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
புதுவை கடற்கரைச் சாலையில் தலைமைச் செயலகம் அருகே போர்வீரர் நினைவிடம் உள்ளது. இங்குப் போர்வீரர் நினைவு தூண்கள் அமைக்கப்பட்டு நடுவில் தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி இருக்கும்.
அந்த துப்பாக்கியின் மேல் ஹெல்மெட் ஒன்று மாட்டி வைக்கப்பட்டிருந்தது. நேற்று இந்த ஹெல்மெட் மாயமாகி இருந்தது.இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் பெரியகடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு விசாரணை நடத்தினார்கள்.
நினைவு தூணில் இருந்த ஹெல்மேட்டை மர்ம ஆசாமிகள் யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஹெல்மெட்டை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.
தற்போதும் அதேபோல் மீண்டும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தலைமைச் செயலகத்தில் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்படியிருக்க அதன் எதிரிலேயே திருட்டு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.