புதுவையில் பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவி.. 2 அமைச்சர்கள்.. விரைவில் பதவியேற்பு!
புதுச்சேரி: புதுவையில் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
புதுவை சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது.
இதில் என்.ஆர்,காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி வாகை சூடியது.

என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக ஆட்சி
அறுதி பெரும்பான்மை கிடைத்து விட்டதால் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தலைவராக, அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்க பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களும் ஆதரவளித்தனர்.

முதல்வர் ரங்கசாமி
இதனை தொடர்ந்து ரங்கசாமி கடந்த 3-ந்தேதி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்று அவரை ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று புதுவை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ரங்கசாமி.

அமைச்சர்கள் பதவியேற்கவில்லை
மற்ற அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. எளிமையாக நடந்த இந்த பதவி ஏற்பு விழாவில், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர்கள், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி என 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி
பதவியேற்பு விழா முடிந்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ' புதுவையில் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பாஜக எம்.எல்.ஏக்கள் 2 பேருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் இன்னும் சில நாட்களில் பதவியேற்பார்கள். என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே இணக்கமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று கிஷன் ரெட்டி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications