என்ன பாஜக அகற்றப்பட்டதா? தனது திருப்திக்காக ஸ்டாலின் இப்படி சொல்கிறார்.. எல்.முருகன் பதிலடி!
புதுச்சேரி : "திராவிட மண்ணில் பாஜக வளர முடியாது என்று தனது திருப்திக்காக ஸ்டாலின் சொல்லி வருகிறார், தமிழ்நாட்டில் பாஜக எம்எல்ஏக்கள் இருந்து கொண்டிருக்கிறோம். புதுச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயக ஆட்சி நடக்கிறது" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பெற்ற நிலையில், பாஜக ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. பாஜக நேரடியாக ஆட்சியில் இருந்த ஒரே தென் மாநிலமான கர்நாடகாவிலும் ஆட்சியை இழந்துள்ளது. கர்நாடக மாநில தேர்தல் முடிவு வெளியானபோது திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு பதில் அளித்தார். தமிழ் மண்ணான புதுச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் எம்.எல்.ஏக்கள் இருக்கிறோம், ஸ்டாலினின் கருத்து கற்பனையானது எனத் தெரிவித்தார்.
எல்.முருகன் பேசுகையில், "தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. தமிழ்நாட்டில் கூட திமுக பலமுறை தூக்கி எறியப்பட்டது. எம்.ஜி.ஆர் இருந்தபோது திமுக வெற்றி பெறுவதே கடினமாக இருந்தது. கருணாநிதி ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். ஆகவே ஒரு தேர்தலை வைத்து மட்டுமே மற்ற விஷயங்களை சொல்ல முடியாது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக எம்எல்ஏக்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். புதுச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயக ஆட்சி நடக்கிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளோம். எனவே, திராவிட மண்ணில் பாஜக வரமுடியாது, பாஜக துடைத்தெறியப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறுவது அவருடைய கற்பனை.
தனது திருப்திக்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று சொல்லி வருகிறார். உண்மையில் இன்று பாஜகவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் 2018-ல் பாஜகவின் வாக்கு சதவீதம் எப்படி இருந்தததோ, அதே போன்ற வாக்கு சதவீதம் இப்போதும் உள்ளது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications