கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராடி வரும் நிலையில், ஆளுநர் மாளிகை வளாகத்தில் கிரண்பேடி ஹாயாக சைக்கிளில் உலா வரும் வீடியோ வெளியாகி உள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராடி வரும் நிலையில், ஆளுநர் மாளிகை வளாகத்தில் கிரண்பேடி ஹாயாக சைக்கிளில் உலா வரும் வீடியோ வெளியாகி உள்ளது.
மக்கள் நலத்திட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாக கூறி முதல்வர் நாராயணசாமி தலைமையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று 5 வது நாளாக ஆளுநர் மாளிகை வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனிடையே இன்று கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் கிரண்பேடி பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், முதலமைச்சர் விதித்த நிபந்தனைகளுக்கு கிரண்பேடி ஒப்புதல் தராததால் பேச்சுவார்த்தை நடப்பதில் தொடர்ந்து இழுபரி நீடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக ஆளுநர் மாளிகைக்கு வெளியே முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உணவு உண்டும், இரவில் சாலையில் படுத்து உறங்கியும் வரும் நிலையில், கிரண்பேடி தனது ஊழியர்களுடன் ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஹாயாக சைக்கிளில் சென்று உடற்பயிற்சி மேற்கொண்டார்.
இதனை வெளியே இருந்து பார்த்த முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் சைக்கிளில் ஹாயாக உலாவருவதாக கொதித்தெழுந்தனர். மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது செல்போனில் கிரண்பேடி சைக்கிளில் செல்வதை வீடியோ எடுத்து, மக்கள் நலனில் அக்கரை இல்லாத கிரண்பேடி என சமூக வலைதளங்களில் பதிர்ந்து வருகின்றனர்.