வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் “தாமரைப்பூ”.. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
புதுச்சேரி: புதுச்சேரி பாகூரில் வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் தாமரை மலர் வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டதை அடுத்து, திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தாமரை மலர் வடிவங்கள் அகற்றப்பட்டன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாளை முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு, வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், பாஜக சார்பில் மாநில உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம், அதிமுக சார்பில் தமிழ் வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் காகிதத்தால் செய்யப்பட்ட தாமரை மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதும், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாங்க்குச்சாவடிக்கு சென்று வாக்குவாதம் செய்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த பிங்க் மற்றும் வெள்ளை நிற தாமரை வடிவிலான காகிதப் பூக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications