பழிக்குப் பழி..புதுச்சேரி ரவுடி கொடூர கொலை.. 9 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் நண்பரை கொலை செய்த ரவுடியை, பழிக்குப் பழியாக நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்த 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், மற்றும் செல்போஃன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்த ரவுடி பன்னீர்செல்வம் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துகொண்டு இருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குள் புகுந்தது.

கொலை வெறி கும்பலைப் பார்த்ததும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அக்கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது சரமாரியாக வீசியது. மேலும், அந்த கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில் பன்னீர்செல்வம், சத்தியவாசகன் உள்ளிட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தன்வந்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பன்னீர்செல்வத்தை கொலை செய்தது, அதே பகுதியை சேர்ந்த ஜாண்டி செந்தில் தலைமையிலான கும்பல் என தெரிய வந்தது.
இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார், திருக்காஞ்சி ஏரிகரையில் பதுங்கி இருந்த ஜாண்டி செந்தில், வைசாக், தீவனூர் பரத், சண்முகபுரத்தை சேர்ந்த கனகராஜ், விமல், அஜித், பூத்துறை பரத், மூர்த்தி, யுவராஜ் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஜாண்டி செந்திலின் நண்பரான ஜெயபாலை, பலியான ரவுடி பன்னீர்செல்வம் தலைமையிலான கும்பல், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்தது தெரியவந்தது.
இதற்காக பழி வாங்கும் விதமாக ரவுடி பன்னீர்செல்வத்தை கொலை செய்ய இரண்டு ஆண்டுகளாக எதிர் தரப்பு திட்டமிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் கொலைக்கு பயன்படுத்திய கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், மற்றும் செல்போஃன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், ஒன்பது பேரையும் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி, புதுச்சேரி காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications