நம்பிக்கை வாக்கெடுப்பு- சட்டசபையில் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும்... முதல்வர் நாராயணசாமி
புதுவை: கூட்டணிக் கட்சிகளின் கருத்தைக் கேட்டு, நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
புதுச்சேரியில் தற்போது பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால், நாராயணசாமி அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் நாராயணசாமி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில், இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
30 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் தற்போதுவரை 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஒரு திமுக எம்.எல்.ஏ.வும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. அதேநேரம் நியமன உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 15 எம்எல்ஏகளின் ஆதரவு எதிர்க்கட்சிக்கு உள்ளது.
புதுச்சேரி: நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு-நான் ராஜினாமா செய்யவே இல்லை- ஆடியோ வெளியிட்ட விஜயவேணி எம்எல்ஏ
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணிக் கட்சிகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசித்தோம்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாளை காலை சட்டமன்றம் கூடுவதற்கு முன்பாக சட்டமன்றத்தில் எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம். கூட்டணிக் கட்சிகள் கருத்தைக் கேட்டு நாளை காலை இறுதி முடிவு தெரிவிக்கப்படும்" என்றார்.