10 எம்எல்ஏ, ஒரு எம்பி.. புதுச்சேரியில் பாமக ஆட்சி.. பொதுக்குழுவில் திட்டம் தீட்டிய ராமதாஸ்..!
புதுச்சேரி: 10 எம்.எல்.ஏ-க்கள், ஒரு எம்.பி.யும் வெற்றிபெற்றால் பாமகவால் புதுச்சேரியில் ஆட்சியை அமைக்க முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாமக பொதுக்குழு கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அதற்கு மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் புதுச்சேரியில் முழு பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும், புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் இருந்து மதுக்கடைகளை அகற்ற வேண்டும், சுற்றுலா என்ற பெயரில் கலாசார சீரழிவை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுச்சேரியில் பாமக ஆட்சி
இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று பேசுகையில், பாமகவினரை கட்டி இழுக்க வேண்டியதில்லை. இளைஞர்களை ஒன்றுதிரட்டி, பொறுப்புகள் வழங்கி, குழுவாக ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும். புதுச்சேரியில் 8, காரைக்காலில் 2 என 10 எம்எல்ஏக்கள், ஒரு எம்பி-யும் வெற்றி பெற்றால் போதும். பாமக-வால் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்து விட முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த காலங்களில் புதுச்சேரியின் நகரம் மற்றும் கிராமங்களில் தெரு தெருவாக, வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனாலும் நாம் ஆட்சியைப் பிடிக்கவில்லை. எனது பிரச்சாரத்தின் பயனை யாரோ அனுபவித்தார்கள்.

மது ஒழிப்பு
இக்கூட்ட தீர்மானங்கள் நிறைவேற பாமகவின் ஆட்சி புதுச்சேரியில் அமைய வேண்டும். குறிப்பாக, பெண்களிடம் பேசினால் அந்த வீட்டின் அனைத்து வாக்குகளும் நமக்கு கிடைக்கும். புதுச்சேரி மாநிலத்தில் பாமக ஆட்சி அமைத்து, பாமக முதல்வர் போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதே. மதுவை விட கொடியது கஞ்சா. அதனை ஒழிக்க தீர்மானம் போட்டால் மட்டும் போதாது. கஞ்சாவை ஒழிக்க மாதம் ஒரு போராட்டத்தை பாமக முன்னெடுக்க வேண்டும்.

ஜிப்மர் விவகாரம்
அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, ஜிப்மரை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தற்போது ஜிப்மர் போதிய மருந்துகளின்றி மோசமான நிலையில் உள்ளது என்று விமர்சித்தார்.
Recommended Video

பாமகவுக்கு வாக்களியுங்கள்
தொடர்ந்து, மக்கள் பாமகவை வேறு மாதிரி பார்க்கிறார்கள். கொள்கையுடைய கட்சி, ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் பாடுபடும் ஒரே கட்சி பாமகதான். புதுச்சேரி மாநிலம் தனி அந்தஸ்து பெற்ற சிறந்த மாநிலமாக நாங்கள் உருவாக்குவோம். இதற்கு மக்களின் ஆதரவு தேவை. திரும்ப திரும்ப இரு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பதால் ஒரு பயனும் இல்லை. இதனை உணர்ந்து பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications