புதுச்சேரியில்.. 'நீட்' தேர்வு உண்டா? இல்லையா?.. கேள்வி கேட்ட நிருபர்.. அமைச்சரின் பதிலை பாருங்க!
புதுச்சேரி: இந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது.
தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வுக்கு எப்போதும் எதிர்ப்பு இருந்து வருகிறது. புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என்று ஏற்கனவே கூறி இருந்தது.

நீட் தேர்வு
நீட் தேர்வினால் கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரும் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதில் பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்தி இருந்ததாக கூறப்பட்டது.

தமிழ்நாடு நிலைப்பாடு இதுதான்
இது ஒரு புறம் இருக்க "நீட் தேர்விற்கு மாணவர்கள் தயாராவதில் தவறில்லை'' என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்று மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியை கைப்பற்றி விட்டதாக எதிர்க்கட்சிகளும் திமுகவை வசைபாடி வருகின்றன.

புதுவை நிலை என்ன?
தமிழ்நாடு நிலைமை இப்படியிருக்க, பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் நீட் தேர்வு நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த நமச்சிவாயம் கூறுகையில், ' நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. புதுச்சேரி அரசு என்பது மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அரசாகும்.

ஆன்லைன் தேர்வு
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் புதுச்சேரி அரசை நடத்த முடியும். எனவே புதுச்சேரியில் நீட் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications